சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ் மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமை தொடர்பில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மினுவாங்கொட பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடைமையாற்றுபவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் இருவர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
அவர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் அவர்களோடு தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். எனினும் மக்கள் கொரோனாவில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் சுகாதார அமைச்சு கொரோனா தடுப்பு செயலணியின் அறிவுரைகளுக்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரால் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன அதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று ஏற்படாதவாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக வீடுகளை விட்டு வெளியில் வரும்போது முகக் கவசங்களை அணிந்து கைகளை நன்றாக கழுவி சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலம் குறித்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்
மேலும் நாளைய தினம் இடம்பெறவிருந்த பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு திகதி பிற்போடப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்திற்கு இணைவதற்கு விண்ணப்பித்தவர்கள் அதனை கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுகொண்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை