தேர்தல் சட்டவிதி மீறல்! ரிஷாத்திற்கு நடவடிக்கை!
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக தண்டனை சட்டக் கோவை , பொது சொத்துக்கள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டவிதிகளுக்கமையவும் சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கடந்த ஐனாதிபதி தேர்தலின்போது புத்தளத்திலிருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடப்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துக் கொடுத்தமை ஊடாக , நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றுவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யுமாறு கடந்த 13 ஆம் திகதி சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் 6 தினங்களுக்கு பின்னர் நேற்று திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் ரிசாத்தின் கணக்கு விவகார நடவடிக்கைகளை செய்து வந்த கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் மற்றும் ரிசாத்தான் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிடுந்த கான்ஸ்டபிள் ஒருவரும் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பயன்பனுத்திய இரு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் ரிசாட் பதியுதீனை கைது தாமதமாகியமை தொடர்பில் அரசாங்கம் , பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர் உட்பட அனைத்து பொலிஸார் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கக்பட்டிருந்தன. அதற்கமைய தெஹிவளை பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் ரிசாத் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இரு தினங்களாக கொவூவல - கலுபோவில பகுதி வீடொன்றிலும் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது சந்தேக நபரொருவருக்கு மறைந்திருப்பதற்காக உதவி ஒத்தாசை களை வழங்கியமை தொடர்பில் இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக கூறப்படும் நபரொருவர் அட்டாளைச்சேனை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளார்.
சந்தேக நபர்கள் அனைவரும் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். இதன் போது பிரதான சந்தேக நபரான முன்னாள் அமைச்சருக்கு எதிராக எதிராக தண்டனை சட்டக் கோவை ,பொது சொத்துக்கள் சட்ட விதிகள் மற்றும் ஐனாதிபதி தேர்தல் சட்டவிதிகளுக்கமையவும் சட்ட நடவிக்கை எடுக்கப்படும். இதேவேளை நீண்டகாலமாக இடம்பெயர்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர் சம்சுதீன் மொஹம்மட் யசீனையும் கைது செய்வதற்கான சோதனை நடவிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை