அரசாங்க அதிபர் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு!

 


யாழ். மாவட்ட மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவசர அறிவிப்பை விடுத்துள்ளார்.


தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


குறித்த அறிவிப்பில், “கம்பஹா மாவட்டம், மினுவாங்கொட, திவுலபிட்டிய பகுதிகயில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டதையடுத்து நாடு பூராகவும் சுகாதார அமைச்சு, கொரோனா தடுப்பு செயலணியினால் கொரோனா தொற்றினை தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்ட பொது மக்கள் அவதானமாகச் செயற்பட்டு தங்களைத் தாங்களாகவே பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும். இதனடிப்படையில் யாழ். மாவட்ட மக்கள் அநாவசியமற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து வீடுகளில் இருப்பதோடு, வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியினைப் பேண வேண்டும்.


மேலும், சமூகத் தொற்று எந்த உருவில் எங்கே, எப்போது தொற்றும் என யாருக்கும் தெரியாது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து யாழ். மாவட்ட மக்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.


பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தோடு அரச அலுவலகங்கள் வழமைபோல் செயற்படும். இந்த விடயங்களை யாழ். மாவட்ட மக்கள் அனைவரும் கருத்திலெடுக்க வேண்டும்.


அத்துடன், யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் மினுவாங்கொட பகுதியில் இருந்து வருகை தந்தோர் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.