மாவீரர் நாளுக்கு தடை விதிக்க மல்லாகம் நீதிவான் மறுப்பு!


 பொலிஸாரின் மாவீரர் நாள் தடை கோரிக்கை மனுவுக்கு இணங்கி தடை விதிக்க மறுத்தும் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணித்தும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் இன்று (20) மாலை கட்டளை வழங்கினார்.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்றைய தினம் (19) காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினத்திற்கு திகதியிடப்பட்ட நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது “பொலிஸாரினால் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழான சட்ட ஏற்பாடுகளை மீறாதும், இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்படுள்ள தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாமலும் நிகழ்வுகளை நடத்த முடியும் என்றும் அதனை மீறினால் மீறுபவர்களை கைது செய்யமாறும்” நீதிவான் தனது கட்டளையில் குறிப்பிட்டார்.

அத்துடன் பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் பிரதேச பிரிவின் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.