துப்பாக்கியால் சுட்ட 80 வயது நபர் கைது!


 தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டப்பகலில் இருவரை துப்பாக்கியால் சுட்ட 80 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமான 12 சென்ட் காலி மனை பழனி அப்பர் தெருவில் உள்ளது.

அந்த இடத்தின் அருகே தொழிலதிபரும் திரையரங்கு உரிமையாளருமான நடராஜன் வசித்து வருகிறார்.

இதுவரையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில் தனது நிலத்தின் ஒரு பகுதியும் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனது நிலத்தில் வேலி அமைப்பதற்காக இளங்கோவன் திங்கள்கிழமை சென்றுள்ளார்.

இதனை அறிந்த நடராஜன் வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இளங்கோவனின் உறவினர்களான பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் நடராஜன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், ஆத்திரம் அடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டுள்ளார்.

இதனைப் பார்த்த இளங்கோவன் தப்பி ஓடிய நிலையில் பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்த இளங்கோவன் காயமடைந்த பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த பழனி காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாகத் தப்பியோடிய தொழிலதிபர் நடராஜனைக் கைது செய்தனர். இதனிடையே வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த பழனிச்சாமி சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.