பிரான்சு பந்தன் துயிலும் இல்லப் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் கல்லறை வணக்க நிகழ்வுகள்!📸!


பிரான்சில் மாவீரர் நாள் 2020 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் 27.11.2020 அன்று இடம்பெற்றன.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களின் கல்லறையில் பொதுச்சுடரை இவ்றி சூ சென் தமிழ்ச் சங்கப் தலைவர் திரு.சாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க சமநேரத்தில் கேணல் பரிதி அவர்களின் கல்லறையில் நுவாசிலுசெக் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. ம.சசிக்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து கேணல் நாதன் அவர்களுக்கான ஈகைச்சுடரை 13.03.2009 அன்று முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் எழில்வீரன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க, கப்டன் கஜன் அவர்களுக்கான ஈகைச்சுடரை கப்டன் கஜன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார். கேணல் நாதன் அவர்களுக்கான மலர் மாலையை 1999 இல் கொக்குவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரர் அணிவிக்க கப்டன் கஜன் அவர்களுக்கான மலர்மாலையை கப்டன் கஜன் அவர்களின் சகோதரர்கள் அணிவித்தார். சமநேரத்தில் கேணல் பரிதி அவர்களுக்கான ஈகைச்சுடரை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். 

கேணல் பரிதி அவர்களுக்கான மலர் மாலையை 24.03.1997 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் மீதான் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்புலி மாவேந்தன் அல்லது சுகுணன் அவர்களினதும் 18.04.2009 அன்று வன்னி மீது சிங்களக்காடையரின் இன அழிப்பின் போது வீரச்சாவடைந்த ராதா வான்காப்புப் படையணி லெப்.கேணல் உருத்திரன் அவர்களினதும் சகோதரன் அணிவித்தார். 

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்ததையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர். 

நிகழ்வில் நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். மாவீரர் நினைவு சுமந்த கவிதையினை பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜனனி அவர்கள் வாசித்தளித்திருந்தார். 

தொடர்ந்து ”தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது. 

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.