ஜனாசாக்களை புதைக்க அனுமதிக்க முடியாது என்கிறார் முகமட் முசம்மில்


கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

நாடு கொரோனா வைரசினை எதிர்கொள்ளமுடியாமல் திணறுகின்ற நிலையில், எவரும் அரசியல் செய்வதற்கு இடமளிக்ககூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மதஆணைகள் உணர்வுகள் எவ்வாறானவையாகயிருந்தாலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவுகளை இலங்கையின் முஸ்லீம் சமூகம் பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனாவின் இரண்டாவது அலை பேரிடரை உருவாக்கலாம் என தெரிவித்துள்ள அவர், இலங்கையின் முஸ்லீம் சமூகத்திற்கு அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதை தவிரவேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளை போல தேசத்தின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு வருமானத்தை தேடி தந்த சுற்றுலாத்துறை ஆடைதொழில்துறை வெளிநாட்டு வருமானம் போன்ற மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக சுகாதார நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரிடர் நிலையேற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பொதுமக்களின் நன்மைக்காகவே தீர்மானங்களை எடுக்கவேண்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைப்பது தற்போது காணப்படும் சுகாதார வழிகாட்டுதல்களிற்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் சமூகத்தினரை புதைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முகமட் முஸம்மில், தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கவேண்டும் இந்த உணர்வுபூர்வமான விடயத்தில் அவர்கள் நிலைப்பாடொன்றை எடுப்பதில் எந்த தவறுமில்லை,எனினும் சரியான விடயத்தை செய்யும் பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை கத்தோலிக்க சமூகத்தினர் அரசாங்கததின் உத்தரவினை விவகாரமாக மாற்றாமல் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உடல்களை புதைப்பது எவ்வாறு பேரிடரை ஏற்படுத்தலாம் என்பதை நான் தெளிவுபடுத்துகின்றேன், கத்தோலிக்க சமூகத்தினர் போன்று நாங்கள் நிலத்தில் குழியை வெட்டி உடல் மண்ணுடன் கலப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இதன் காரணமாக சுகாதார பிரச்சினைகள் உருவாகலாம் என குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக உடல்களை புதைப்பதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது எனவும் கூறினார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் கொடுத்தால் அந்த பகுதி முழுவதும் கொரோனா பரவலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மாறான நிலைப்பாட்டை எடுப்பதற்காக நான் சமூகத்தின் ஒரு பிரிவினரின் சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கலாம் என்றும், எனினும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் தொடர்பில் மக்களிற்கு அறிவூட்டி துரிதமாக பரவும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு உதவவேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லீம்கள் உட்பட அனைதது சமூகத்தினரும் நிபுணர்கள் தங்கள் ஆய்வுகளை பூர்த்தி செய்யும்வரை தங்கள் பாரம்பரியங்களை நடைமுறைகளை விட்டுக்கொடுக்க தயாராகயிருக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.