இலங்கையில் முடக்கம் குறித்து முன்னாள் சபாநாயகர் கருத்து!!


 சுகாதாரத்துறை நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் எடுப்பதன் ஊடாகவே நாடு தொடர்ச்சியாக முடக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகள், குறிப்பாக எழுமாற்றாக மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் சுகாதார சேவையின் செயற்திறனை உயர்த்துதல் ஆகிய ஆலோசனைகள் தொடர்ச்சியாகக் கருத்தில் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சுமார் 20,000 மாதிரிகள் நிலுவையில் இருப்பதாகவும் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் முச்சக்கரவண்டிகளில் தங்கியிருக்கும் நிலையேற்பட்டிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பாகக் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அத்துடன், நாட்டிலுள்ள சுகாதாரசேவை வசதிகளின் ஊடாக கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களைக் கையாள முடியுமென்றால் மாத்திரமே நாட்டில் முடக்கத்தை நீக்கி, வழமைபோன்று செயற்பட அனுமதிக்க முடியும்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் செயற்திறனை அதிகரித்தல், தொற்றுக்குள்ளானவர்களை முறையாகத் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக மாத்திரமே இந்தத் தொடர்ச்சியான முடக்கத்தைத் தவிர்க்க முடியும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.