தந்தையை வீதியில் விரட்டி விரட்டி அடித்த மகன்!


 தனது மோட்டார் சைக்கிளை திருடி அடகு வைத்து மது அருந்திய தந்தையை அவரது மகன் ஓட ஓட அடித்து துவைத்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றது.

மகன் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது மோட்டார் சைக்கிளை திருடி அடகு வைத்து அந்த பணத்தில் மது அருந்தி உற்சாகமாக இருந்துள்ளார் தந்தை. வேலை முடிந்து வீடு திரும்பிய மகன், தனது மோட்டார் சைக்கிளை காணாது திகைப்படைந்தார். அது குறித்து வினவியபோது, தனக்கு எதுவும் தெரியாதென தந்தை கூறிவிட்டார்.

பல இடங்களிலும் தேடிய மகன், இறுதியில் தனது மோட்டார் சைக்கிள்களை தந்தையே அடகு வைத்து மது அருந்தியதை அறிந்துகொண்டார். இதனால் கோபமடைந்த அவர் தந்தையிடம் வந்து கேட்டுள்ளார். மது அருந்த பணம் தேவைப்பட்டதால் அடகு வைத்தேன் என தந்தை பதில் அளித்தார்.

இதனால் கோபமடைந்த மகன், வீட்டிலிருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து தந்தையை தாக்கியுள்ளார். அலறி துடித்தபடி தந்தை வீட்டை விட்டு வெளியே ஓடினார். எனினும், கோபம் அடங்காத மகன் வீதியிலும் விரட்டிவிரட்டி தாக்கியுள்ளார்.

எனினும் பின்னர் அயலவர்கள் அவரை மீட்டு தருமபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தந்தையை தாக்கிய மகன் இரும்பு கம்பியுடன் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.