கடலும் கடல் நிலை மாற்றங்களும் - கட்டுரை!

 


முன்னுரை

சமுத்திரம் அதன் வகைகள், ஆறாமீனறவோட்டு புயல் அறிகுறி, கடல், கடல் அளவறிதல் அபிதான சிந்தாமணி தரும் செய்தி, மகாசமுத்திரங்களின் பகுதிகள், நீர்ப்பரப்புகள், கருங்கடல், திசையறிகருவி, நிலையான நட்சத்திரங்கள் துருவ நட்சத்திரம் (pole star), வைத்தியக்குணம் சமுத்திர நீரை காய்ச்சிக் குடித்தல், வருஷகர்ப்பம் சமுத்திரத்தில் மழை பிரளயம், கடல் வற்றல் மாதங்கள் ஆடி - ஆதி, ஆவணி - சனி, புரட்டாசி - செவ்வாய் மாதம் கிழமை பிறத்தல், காண்க. சூரியன் புதனுக்கும், சுக்கிரனுக்கும் நடுவில் செல்லல், செவ்வாய் நீசத்தில் நின்ற பலன், கடல் நீர் வற்றல், பொய் கூறல், சுக்கிரன் நீசத்தில் நின்ற பலன், நீசத்தில் வக்கரித்து நின்ற பலன்கள், கடல் விளைபொருட்கள் சிறப்பாய்த் திகழ்தல், இராட்சதக் கடல் அலைகள், கடல் உள் வாங்கல், வற்றல், கடல் நிலை மெய்ப்பித்தல், இலக்கியப் பதிவுகள் எழிலி மழை நீர் அறிவியல் செய்தி, கடல் அலையை நிறுத்தும் அகத்திய நட்சத்திரம், திரிசங்கு சொர்க்கம், திரிசங்கு உதயம், அத்தமனம், திரிசக்கரம், மகிஷாசுர மண்டலம் (Centaurs), கப்பல் மண்டலம் அல்லது மலைய மண்டலம் அல்லது பொதிகை மண்டலம், அகத்திய நட்சத்திரம் (Canopus) ஆகியவற்றினைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சமுத்திரம் அதன் வகைகள்

தமிழ் தமிழ் அகராதி நுால், சமுத்திரம் என்பது கடல் எனப்படும். சப்த சமுத்திரம் எழுவகைச் சமுத்திரங்கள். அவை உவர்நீர்ச் சமுத்திரம், நன்னீர்ச் சமுத்திரம், பாற் சமுத்திரம், தயிர்ச் சமுத்திரம், நெய்ச் சமுத்திரம். கறுப்பஞ்சமுத்திரம், தேன் சமுத்திரம் எனறு தெரிவிக்கின்றது. (1) அபிதான சிந்தாமணி எனும் நுால் இது நதியை நோக்கி நீ வௌ்ளங் கொண்டு பெரு மரங்களையும், மலைகளையும் புரட்டி வருகின்றாய். சிறு நீர் நொச்சியைப் பிடுங்க உனக்கு வலியில்லாமைக்குக் காரணம் கூறுகவென எது பகைக்குத் தலை வணங்குகிறதோ, அது துன்பத்திலிருந்து நீங்குதலுமின்றி என்னாலும் வெல்ல முடியாதாம் என்ற (பார - சந்) செய்தியினால் இதன் விளக்கம் தெளிவாகின்றது. (2)

கடல்

அபிதான சிந்தாமணி எனும் நுால் வானியலில் கடலும் ஒன்று. உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு கொண்ட நீர் நிலை. இது உலகைச் சூழ்ந்த நீர்ப்பரப்பு. இது பெரும்பாலும் உப்பு நீர் கொண்டது. அவ்வாறிருப்பதற்குப் பல காரணங்கள் கூறுவர். உலகம் முதலில் அக்னிக் கோளமாக இருந்தது. அது வர வரக் குளிர்ந்து பூமியாக அதிலுள்ள உப்புச் சேர்ந்த பொருள் கரைந்து கலப்புற்றது எனவும், மலைமரம் பூமிகளுடன் இயற்கையில் சேர்ந்துள்ள உப்புகள் நெடுங்காலமாக ஆற்றினால் கொண்டு சேர்க்கப்படுதலாலும் என்பர். இதில் அலைகள், பூமியின் உருட்சியாலும், சந்திர சூரியர்களின் இயக்கத்தாலும் உண்டாகின்றன என்பர். இதன் ஏற்ற ஏற்றங்கள் 6 மணிக்கு ஒரு முறை உண்டாம். இவ்வாறு உண்டாவதற்குக் காரணம் சந்திர, சூரியர்களின் ஆகர்ஷண சக்தியாம். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சூரிய சந்திரர் இருவருஞ் சேர்ந்து பூமியையும், ஜலத்தையும் இழுப்பதால் அதிகப் பெருக்கு உண்டாகிறது. பௌர்ணமியில் சந்திரன் பூமிக்குச் சமீபத்தில் இருந்து சூரியனைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம் இழுப்பதால் கொந்தளிப்பு அதிகப்படுகிறது. அதாவது சூரியன் 2 மடங்கு இருந்தால் சந்திரன் 5 மடங்கு இருக்கிறது. இது உப்பாய் இருத்தற்குப் பூமியில் ஒரு வகை உப்பு இருக்கிறது என்பர். இது கப்பல் போக்குவரவிற்கும் இரத்தினோற்பத்திக்கும், பல வித சலசரங்களின் பிறப்பிற்கும் இடமானது என்பதை நாம் அறியலாம்.

கடல் அளவறிதல்

இலவண சமுத்திரம் இதன் குறு வட்டம் லட்சம் யோசனை. இது சம்புத் தீவினைச் சூழும். இதற்கு அப்பால் கருப்பஞ்சாற்றுக் கடல். இது இரண்டு லட்சம் யோசனை. இது சான்மலித் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கப்பால் மது சமுத்திரம். இது நான்கு லட்சம் யோசனை. இது பிலவத்தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் நெய்க்கடல். இது எட்டு லட்சம் யோசனை. இது கிரௌஞ்சத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் தயிர்க்கடல். இது பதினாறு லட்சம் யோசனை. இது குசத்தீவினைச் சூழ்ந்திருக்கும். அதற்கு அப்பால் பாற்கடல். இது முப்பத்திரண்டு லட்சம் யோசனை. இது சாகத்தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் சுத்த ஜலம். இது அறுபத்து நான்கு லட்சம் யோசனை. இது புட்காத்தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் சக்கிரவாளகிரி. நெல்லளவறிதல் - செவிடு 5 கொண்டது ஆழாக்கு. ஆழாக்கு 2 கொண்டது உழக்கு. உழக்கு 4 கொண்டது நாழி. நாழி 8 கொண்டது குறுணி. குறுணி 4 கொண்டது தூணி. தூணி 3 கொண்டது கலம். பாண்டி நாட்டிலும், மற்றைய நாடுகளிலும் இந்நெல்லளவை வேறுபடும். நாழிகை அறிதல் - கண்ணிமை இரண்டு கொண்டது கைந்நொடி. கைந்நொடி இரண்டு கொண்டது மாத்திரை. மாத்திரை இரண்டு கொண்டது குரு. குரு இரண்டு கொண்டது உயிர். உயிர் ஆறு கொண்டது ஷணிகம். ஷணிகம் 12 கொண்டது விநாடி. விநாடி 60 கொண்டது நாழிகை. நாழிகை 7½ கொண்டது ஜாமம். ஜாமம் 4 கொண்டது பொழுது. பொழுது 1 கொண்டது நாள். நாள் 30 கொண்டது மாதம். மாதம் 12 கொண்டது வருடம். இனி வருட அளவை இத்துணை கொண்டது யுகம் என்பது முதலியவற்றை யுக பரிமாணத்தில் அறிக. இனித் தொகை அறிதலாவது ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி இவை ஒன்றிற்கு ஒன்று பதின்மடங்கு மேற்பட்டவை. இக்கோடி கொண்டது மகாகோடி. அது அவ்வளவு கொண்டது சங்கம். அவ்வகைக் கணக்கு ஒவ்வொன்றிற்கும் கொள்க. மகாசங்கம், விந்தம், மகாவிந்தம் சமுத்திரம், மகாசமுத்திரம், வௌ்ளம், மகாவௌ்ளம், பிரளயம், மகாப்பிரளயம், யோசனை, மகாயோசனை, கற்பம், மகாகற்பம், விகற்பம், மாகம், மகாமாகம், தன்மனை, மகா தன்மனை, அற்புதம், மகா அற்புதம், உற்பலம், மகா உற்பலம், வேணு, மகாவேணு, சலஞ்சலம், மகா சலஞ்சலம், மந்தாரை, மகா மந்தாரை, மேரு, மகா மேரு, வலம்புரி, மகா வலம்புரி எனத் தொகை கொள்வர். மணியளவறிதல் பச்சைரதி 1க்கு வராகன் எடை வீசம். கோடி 1க்கு கெம்பு 20. முத்து 1க்குப்பணவெடை முக்காலேயரைக்கால். பவழம் கழஞ்சு 1க்கு பணவெடை 10. ரவை மஞ்சாடி 1க்கு பணவெடை முக்காலே அரைக்கால். பாக்கு ஆயிரங் கொண்டது கலசம், பாக்கு 20,000 கொண்டது அம்மணம். பாக்கு ஒரு லட்சம் கொண்டது அலகு என்பர். இக்கணிதம், பீஜ கணிதம், ஷேத்திர கணிதம், அங்க கணிதம் என மூவகைப்பட்டுப் பல பேதங்களாக ஆன்றோராற் கூறப்பட்டு இருக்கின்றது. பின்னும் இக்கணிதம் சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம் என எண் வகைப்பட்டு வழங்கும். சங்கலிதம் கூட்டல். விபகலிதம், கழித்தல். குணனம், பெருக்கல், பாகாரம், பங்கிடல், வர்க்கம் சமமாகிய இரண்டு எண்ணின் பெருக்கம். கனம் சமமாகிய மூவெண்ணின் பெருக்கம். கனமூலம் அக்கனத் தொகுதியின் நின்றதன் மூலமாகிய ஒரு மூலை அறிதல். (4)

ஆறாமீனறவோட்டு புயல் அறிகுறி

கார்த்திகையில் சூரியன் நுழையும் காலம், மாலுமிகள் அறிந்து கொள்ளும் புயல் அறிகுறி பற்றிய ஒரு வானக்குறி. (சென்னைப் பல்கலைக்கழக அகராதி) இதனை அறிந்து கொண்டு வானியல் அறிஞர்கள் நம் மக்கள், உலகில் உள்ள யாவரும் பாதுகாக்கப் பெறுவதற்கு உறுதுணையாய் உள்ளனர்.

மகாசமுத்திரங்களின் பகுதிகள்

இவை வளைகுடாக்கள், விரிகுடாக்கள், கடற்கால்கள், ஜலசந்திகள் முதலியனவாகும். வளைகுடா என்பது பூமிக்குள் சென்று இரண்டு பூபாகங்களைக் கரையாகக் கொண்ட நீர்ப்பகுதி, விரிகுடா என்பது விரிந்து பூமிக்குள் சென்ற நீர்ப்பகுதி இதுவே கடல். கடற்கால் என்பது கடல் பூமிக்குள் சென்றிருப்பது. ஜலசந்தி என்பது இரண்டு நீர்ப்பாகங்கள் இரண்டு பூமிகளால் நெருக்குண்டு சந்திக்கும் இடங்கள். (5)

நீர்ப்பரப்புகள்

இவை மகாசமுத்திரங்கள், கடல், விரிகுடாக்கள், வளைகுடாக்கள், ஆறுகள், ஏரிகள் எனப் பிரிவுகளாய் உள்ளன. இவ்வகை நீர்ப்பரப்பு இக்கோளத்தைச் சூழ்ந்து பூமி வளராமல் நெய்ப்பைத் தந்து காக்கின்றது. இந்நீர்ப்பரப்புகளின் ஆழங்கள், எங்கும் 2, 3 மைல்கள் ஆழம் உள்ளவைகள் என்பர். சிற்சில இடங்களில் அதிகம் உண்டு. தென் அமெரிக்காவின் கீழ்க்கரையில் உள்ள ரையோடிலாபிளாடா முகத்துவார சமுத்திரத்தின் ஆழம் 8 மைல். பிலிப்பயின் தீவுக்கு வடக்கில் உள்ள கடலின் ஆழம் 18 மைல் என்பர். கடலில் 1000 அடிகளுக்குக் கீழ் இருளே திணிந்திருக்கின்றதாம். ஒளி என்பதே இல்லை. மகாசமுத்திரங்களின் அடிப்பாகம் பூமியைப் போலவே மலைகள், குன்றுகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள், இரத்தின வகைகள், உலோக வகைகள், மரங்கள், செடிகள், பூண்டுகள் முதலியன பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு காலங்களில் மகாசமுத்திரங்களின் அலைகள் இவற்றைத் தவிர 70 அடிக்கு மேல் கிளம்புகிறதும் உண்டென்பர். சில கடல்களில் ஆறுகளைப் போல் நீரோட்டம் கொள்ளுகின்றது. எனவே கடல்களில் நீர்ச்சுழிகள் தோன்றுகின்றன. அந்நீர்ச்சுழல்கள் நீரோட்டங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்வதனால் உண்டாகி யாத்திரை செய்யும் கப்பல்களை நாசஞ்செய்கின்றன. இவ்வகைச் சுழல்கள் நார்வே தேசக் கடற்கரையோரமாக நேரிடுகின்றன என்பர்.

சில வேளைகளில் தரையில் வீசும் சுழல் காற்று, கடலில் உண்டாகி ஜலத்தை மேல் நோக்கி இழுத்துத் துாண்கள் போல் நிற்கச் செய்கிறது. அக்காலத்தில் அகப்பட்ட பொருட்களை ஆகாயத்தில் துாக்கி எறிந்து பின் தரையில் மோதுகிறது. இவ்வாறாகிய நீர்ப்பரப்புகளில் சில பள்ளமாயும், சில மேட்டுப் பாங்காயும் இருக்கின்றன. காஸ்பியன் கடல் அதிக பள்ளமான நீர் மட்டம் உடையது. மத்திய தரைக்கடல் மேட்டுப் பாங்கானது. பெரும்பாலும் இக்கடல்கள் உருசியாலும், குணத்தாலும், நிறத்தாலும் வேறுபடுகின்றன. எல்லாக் கடல்களும் உப்பு நீர் உடையன. மத்திய தரைக்கடலின் கீழ்க்கரையில் சாக்கடல் (Dead Sea) என்பது ஒன்று உண்டு. இது 9 மைல் அகலமும் 47 மைல் நீளமும்; உள்ளது. இதன் நீர் பசுமை. ஆழம் 1308 அடி. அதில் ஜார்டன் முதலிய பல நதிகள் பாய்கின்றன. ஆயினும் இந்நதி அந்த நீரை எங்கு ஒளிக்கின்றது என்பதறியவில்லை. இதில் நீர் வாழ்வன இல்லை. வெயிற்காலத்துப் பறவைகள் அக்கடலின் மீது பறந்து செலினும் இறக்கும் என்பர். இதன் நீர் உப்பால் கனத்திருப்பால் இதில் மனிதன் விழுந்தால் அமிழ்ந்து போகிறதில்லை மிதப்பன். (6)

கருங்கடல்

கருநிறம் உள்ளது. அரேபியாவை அடுத்த செங்கடல், செந்நிறம் உள்ளது. சீனாவை அடுத்தது மஞ்சட்கடல். ஐரோப்பாவின் வடக்கில் வெண் கடல். இவை நிற பேதமுள்ளவை. (7)

திசையறிகருவி

அபிதான சிந்தாமணி எனும் நுால் இது நாவா யாத்திரிகளாகிய கப்பலோட்டிகளுக்குக் கடிகாரம் போல் திசைகளைக் குறிப்பிட்ட வட்ட பீடிகையில் பொருத்தப்பட்ட காந்த ஊசி. இது வடக்கு நோக்கியே நிற்பதால் மற்றத் திசைகளை எளிதில் அறியலாம். (8) இந்தக் கருவியின் மூலம் வானியல் அறிஞர்கள் கடல் நிலை அறிந்து பயன் பெற நமக்கு உதவுகின்றனர். நம் சமுதாயம், மீனவர்கள் உட்பட கடல் வழிப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அனைவரும் இதனால் பாதுகாக்கப் பெறுகின்றனர்.

நிலையான நட்சத்திரங்கள் - துருவ நட்சத்திரம் (pole star)

துருவம் அசையா நிலை, கிரக நடையின் தூரம், துருவ நட்சத்திரம், நிச்சயம், நித்திய யோகத்துள் ஒன்று, வட்டத்தின் முனை. துருவன் முனையில் நிற்கும் நட்சத்திரம். இது துருவ நட்சத்திரம் எனப்படும்.

சூரியன் நுால் பாடம் 9, பகல் நட்சத்திரம் எனும் தலைப்பில் நிலையான நட்சத்திரங்கள் எனும் உட்தலைப்பில் இந்த நட்சத்திரம் குறித்து இது உதிப்பதும் இல்லை. அத்தமிப்பதும் இல்லை. தான் நின்ற நிலையிலேயே நின்று அசையாது ஆகாயத்தில் ஒரே இடத்தில் என்றும் காணப்படும். ஆகையால் மற்றைய நட்சத்திரங்களை எல்லாம் தன் கையில் பிடிக்கும் காற்றாடிகளைப் போலச் சுழற்றுகின்றது போலத் தோன்றினாலும் அவையும் நிலை மாறாதனவே. பூமியின் ஓட்டத்தால் அவை ஓடுகின்றன போலத் தெரிகின்றன. “நாணிரைத்தநேக தாராகா கணமாம் நவமணியுட னவவிதங் கொள்கோணிரைத் தீரேழ் புவனமும் வலஞ் செய்விக்கும் கொற்றமுடைய” துருவனே, இந்த நட்சத்திரம் என்றும், திருமால் அருளால் ஓர் அரச குமாரன் என்றும் அழியாத இந்த பதவியைப் பெற்றான் என்கின்றது புராணம். சப்தரிஷிகள் என்ற ஏழு நட்சத்திரங்களில் முதல் இரண்டிற்கும் நேரேக் கீழே வடதிசையின் நடுவே உள்ளது. இதன் நிலை நமக்கு வடதிக்காகும். ஒரு காந்த ஊசியை மற்றோர் ஊசியின் முனையில் சுழல விடுவோமாயின் அது துருவத்தையே காட்டி நிற்கும். திக்குகளைக் கண்டறிய முன்னாளில் மாலுமிகளுக்கு இந்த நட்சத்திரமே மிகவும் பயன்பட்டது. சப்த ரிஷிகளில் (Great Bear) ஒருவருக்கு ஒருவர் உள்ள துாரம் என்றும் மாறுவதில்லை. திரிசங்குவின் (Southern Cross) திருவுருவமும் சற்றும் கலைவதில்லை. வசிட்டருக்கும், அருந்ததிக்கும் உள்ள துாரம் என்றும் ஒரே தன்மையதாம். அசுவினி முதல் ரேவதி ஈறாக 27 நட்சத்திரங்களில் ஒவ்வொன்றின் உருவ அமைப்பும் பல்லாயிரம் வருடங்கள் ஆகிய போதும் மாறுதலின்றியே தோன்றி வருகின்றன என்று இவ்விதம் தெரிவிக்கின்றது. (9) அபிதான சிந்தாமணி, துருவ நட்சத்திரம், வட திசையின் அடி வானத்தில் தனித்து இருக்கும் பிரகாசம் உள்ள ஒற்றை நட்சத்திரம். இது வடக்கே உள்ள நட்சத்திரங்களில் ஒன்று. தன்னைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களுக்கு நடுவில் பெரிதாகக் காணப்படுவது. இது பூமியின் வட பாகத்தை நிர்ணயிக்க அறிகுறியாக உள்ளது. திசை தெரியாது கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்கு வடக்குக் திசையை அறிவிப்பது என்கின்றது. (10)

வைத்தியக்குணம் - சமுத்திர நீரை காய்ச்சிக்குடித்தல்

இது குறித்து சித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி எனும் நுால் இரத்த குன்மம், உடல்கடுப்பு, உதிரசூலை, ஊனின்று விழல், குஷ்டம், ஐந்திகோஷம், சந்நி, தோஷம், சோணிதவாதம், நடுக்குவாதம், நாக்கிழுப்பு, பல்லில் இரத்தம் வருதல், பீலிகம், பெருநோய், மகோதரம், மகோதரக்கட்டி, மலசலபந்தம், வாதகுன்மம், வாதநீராமை, வெப்பும் போம் என்று தெரிவிக்கின்றது. (11)

வருஷகர்ப்பம் சமுத்திரத்தில் மழை பிரளயம்

ஆதித்தன், கார்த்திகை, ஆவணி, தை இவற்றில் சங்கரமித்தக் காலத்தில் மழை பெய்யும். மார்கழி, ஐப்பசி, புரட்டாசி ஆகிய இவற்றில் சங்கிரமக் காலத்து மழை உண்டாயின் மழை இல்லையாம். ஞாயிறு, செவ்வாய், சனி, இவற்றினாயினும், சந்தியா காலத்தினாயினும், பகற் காலத்தினாயினும் சங்கிரமிக்கின் மழைக்குறைவு உண்டாம். ஐந்து, ஆறு கோட்கள் நிறையே சேர நிற்குமாயின் மிகு மழை உண்டாம். பூராடத்தில் ஆதித்தியன் புக்க நாள் முதல் 13 நாட்கள் சந்திராதித்தர்களை மந்தாரம் மறைக்குமாகில் திருவாதிரை மூன்றாங்காலில் ஆதித்தியன் புக்க நாள் முதல் மாதம் ஒன்றுக்கு 46 நாள் வீதம் ரகசைய கிரியில் மழை பெய்யும். ஆதித்திய கதியால் 6, 7 நாட்கள் அளவும் சமுத்திரத்தில் மழை பிரளயம் பாயும். இந்தப் பதின்மூன்று நாட்களும் நிர்மலமாயிருக்கின் நாள் வீதம் பார்த்து அந்த மாதம் மழையில்லை (விதானமாலை) என்று அபிதான சிந்தாமணி தெரிவிக்கின்றது. (12) விதான மாலை மூலமும் உரையும் எனும் நூல் ஆதித்தியன், கார்த்திகை, ஆவணி, தை ஆகிய இவற்றில் சங்கிரமித்த காலத்து மழை உண்டாகின் மழை பெய்யும். மார்கழி, ஐப்பசி, புரட்டாசி ஆகிய இவற்றில் சங்கிரமக் காலத்து மழை உண்டாயின் இல்லையாம். ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இவற்றாதல் சந்திய காலமாதல், பகற்காலமாதல் சங்கிரமிக்கின் மழைக்குறைவு உண்டாம். ஐந்தாறு கோள் நிறையே சேர நிற்குமாயின் மிகவும் மழை உண்டாம் என்பதனை எச்சவினைப் படலம் செய்யுள்,

“தேளரி மானிற் கதிர்சேர் பொழுதில் வான் பெய்யிற் பெய்யு
மாள்சிலைகோல் பெண்ணிலுண்டேலிலையடுங்கோள தனி
னாளுறிற்சந்தியிற் பகற்சங்கிரமிக்கினன்றலகோ
ணீளநிரையேகின் மழைமிகவுண்டென்னிரை வளையே”

என்று சான்று பகர்கின்றது.

பூராடத்திலே ஆதித்தியன் புக்க நாள் முதல் 13 ஆம் நாள் சந்திராதித்தர்களை மந்தார மறைப்புண்டாகில் திருவாதிரை மூன்றாங்காலில் ஆதித்தியன் புக்க நாள் முதல் மற்றுமொன்றுக்கு இரண்டரை நாள் வீதமாகச் சையங்கிரியிலே மழை பெய்யும். ஆதித்திய கெதியால் ஆறேழு நாளளவும், சமுத்திரத்திலே மழைப்பிரளயம் பாயும். இப்பதின் மூன்று நாளு நிருமலமாய் இருந்தால் நாள் வீதம் பார்த்து அந்த மாதம் மழையில்லை என்றும் இதனை,

“நீரிற்கதிருறுநாளின் மந்தாரநிரம்ப வுண்டேற்
றேரிற்கதிர் செங்கை பற்றிய நாண்முதற்சேர மழை
யார்வுறப் பெய்யுமழை நாட்டிலாறேழு நாளளவில்
வாரித்திரளெழு நாளினில் வேலை மதித்திடுமே” (13)

எனும் செய்யுள் மெய்ப்பிக்கின்றது.

கடல் வற்றல் மாதங்கள் ஆடி - ஆதி, ஆவணி - சனி, புரட்டாசி - செவ்வாய் மாதம் கிழமை பிறத்தல்

மழை நுால் ஆடி மாதமானது ஆதி வாரம் பிறந்தாலும், ஆவணி மாதமானது சனி வாரம் பிறந்தாலும் புரட்டாசி மாதமானது மங்கள வாரம் பிறந்தாலும் கடல் வற்றிய நிலை ஏற்படும். நட்ட பயிர்கள் விளையாது.

”என்றாங் கடக மதியதுவு மிரவிவாரத் துதித்தாலும்
குன்றாச் சிம்ம மதிதானுங் குலவு மந்த னுதித்தாலும்
பொன்றாத் திங்க ளாங்கன்னி பொருந்தக் குசநா ளுதித்தாலும்
நன்றா யுற்ற கடல்வற்றி நாட்டிற் கெடுதி யுண்டாமே”

என்று குறிப்பிடுகின்றது. (ம, செ.எ.50, ப.18.)

சூரியன் புதனுக்கும், சுக்கிரனுக்கும் நடுவில் செல்லல்

உலகினில் சிறந்த காரியின் தந்தை வீரியம் உற்ற சூரியன் இணக்கமான கணக்கன் என்னும் புதனுக்கும், பாரிக்கும், மாரிக்கும் அதிபதியாகிய சுக்கிரனுக்கும் நடுவில் செல்ல கிணறு, கண்வாய், சமுத்திரம் வற்றிப்போகும். அதனால் பசுக்கூட்டங்களும், குதிரைகளும், ஆடுகளும், வேந்தர்களும், மக்களும் தண்ணீர் தாகத்தால் நாவுலர்ந்து வருத்தப்படுவார்கள்.

“ ஆகுமே வெய்யோன் புத்தி யருங்கவிக் கூடே செல்ல
வாகுள கேணி கண்வாய் வாவியும் வாரி வற்றும்
மாகுலம் வெம்பி வாடும் மன்னவர் மற்றோர் தாமும்
தாகத்தால் நாவ ரண்டு தயங்கிடு வாரென் றோதே”

என்றும் குறிப்பிடுகின்றது. (மழை, செ.எ.6, ப.3.)

செவ்வாய் - வக்ரகதி கனைகடற் (சுவற) வற்றல்

செவ்வாய் வக்கிரகதியாய் எத்தனை நாள் இருக்கின்றானோ அத்தனை நாள் வரைக்கும், சொந்த வீடாகிய மேடவிராசியிலும், விருட்சிகராசியிலும் எத்தனை நாள் இருக்கின்றானோ, அத்தனை நாள் வரைக்கும் பூச நட்சத்திரம் முதற் பாதத்தில் எத்தனை நாள் இருக்கின்றானோ, அத்தனை நாள் வரைக்கும் மழையின்றி விளைவு குன்றி அகங்குலைந்து மிக மெலிந்து அனல் பொறி ¤தற, கனைகடற் (சுவற) வற்றத் துன்பம் அடைவார்கள்.

“இருந்திடப் பூமன் வக்ர மியம்புநா ளறுபா னைந்தும்
பொருந்தசொட் சேத்திரத்தும் பூரத்தின் முதற்பாதத்தும்
திருந்தவந் திருக்கு மந்தத் தினம்வரை மாரி யின்றி
வருந்தத்தீப் பொறி பறக்கும் வாரியும் வற்றிப் போமே”

என்றும் குறிப்பிடுகின்றது. (மே, செ.எ.17, ப.7.)

மாதங்கள் ஆடி - ஆதி, ஆவணி - சனி, புரட்டாசி - செவ்வாய் மாதம் கிழமை பிறத்தல்

மழை நுால் ஆடி மாதமானது ஆதி வாரம் பிறந்தாலும், ஆவணி மாதமானது சனி வாரம் பிறந்தாலும் புரட்டாசி மாதமானது மங்கள வாரம் பிறந்தாலும் கடல் வற்றிய நிலை ஏற்படும். நட்ட பயிர்கள் விளையாது.

“என்றாங் கடக மதியதுவு மிரவிவாரத் துதித்தாலும்
குன்றாச் சிம்ம மதிதானுங் குலவு மந்த னுதித்தாலும்
பொன்றாத் திங்க ளாங்கன்னி பொருந்தக் குசநா ளுதித்தாலும்
நன்றா யுற்ற கடல்வற்றி நாட்டிற் கெடுதி யுண்டாமே”

என்று குறிப்பிடுகின்றது. (ம, செ.எ.50, ப.18.)

செவ்வாய் நீசத்தில் நின்ற பலன், கடல் நீர் வற்றல், பொய் கூறல்

செவ்வாய் நீசமாகிய கடகத்தில் இருக்க மேலே முன் செய்யுளில் குறிப்பிட்ட படி மிருகக் கூட்டங்கள் வாட்டமுற்று இருக்கவும், கடல் நீர் வற்றிப் போகவும் செய்யும், செவ்வாய் நீசத்தில் வக்கரமானால், உலகத்தில் மேன்மையானவர்களும் கீழ் மக்களைப் போல மெய் சொல்லாமல் பொய் செல்வார்கள். மக்கள் அமைதியின்றிக் கொலை, களவு மிகுதியாகச் செய்வார்கள்.

“ கதறிடும் விலங் கினங்கள் கடற்சலம் வற்றிப் போகுஞ்
சிதறிடுஞ் செவ்வாய் நீசஞ் சோர்ந்திடிற் றேச மெங்கும்
உதறிடு முண்மை நல்லோ ருரைத்திடார் கொலைமிகுக்கும்
மதமுறுஞ் செவ்வாய் நீச வக்கிரம் நின்ற தாலே”

என்றும் குறிப்பிடுகின்றது. (ம, செ.எண்.133, ப46.)


சுக்கிரன் நீசத்தில் நின்ற பலன், நீசத்தில் வக்கரித்து நின்ற பலன்கள்

சுக்கிரன் நீசமாகிய கன்னியில் இருக்கில் உலகில் மழையின்றி (சமுத்திரம் எல்லாம்), கடல்களும் வற்றிக் கப்பல்கள் மணல் திடலில் தட்டிக் கொள்ளும். சுக்கிரன் இந்த இராசியில் வக்கரித்து நின்றால் தேன் ததும்புகின்ற மலர் மாலையைத் தரித்த அரசர்களுக்கு பொல்லாங்கு உண்டாகும்.

“தானுறும் வௌ்ளி நீசஞ் சார்ந்திட வுதக மின்றிக்
கானுறும் பயிர்க டீய்ந்துங் கடற் சலம் வற்றிப்போகும்
வானுறும் புகரோன் றானும் வக்கர மாகி நிற்கில்
தேனுறுந் தொடை மன்னர்க்குத் துண்டா மென்று கூறே”

என்றும் குறிப்பிடுகின்றது. (மழை, செ.எ.151, பக்.52 - 53)

கடல் விளைபொருட்கள் சிறப்பாய்த் திகழ்தல்

சுக்கிரன் உச்சமாகிய மீனத்தில் அஸ்தமன பலன் மழை நுால் சுக்கிரன் மீனத்தில் அஸ்தமனமாகில் உலகத்தில் சிறப்பாக மழை பெய்து அனைத்து வித தானியங்களும் செழிப்பாய் விளையும். பழமையாகிய சமுத்திரத்தில் முத்துஞ், சங்கும், பவளங்களும் விளைந்து சிறப்பாக ஒளிரும்.

சுக்கிரன் நீசமாகிய கன்னியில் அஸ்தமன பலன்

சுக்கிரன் நீசமாகிய கன்னியில் அஸ்தமனமாகில் உலகில் உள்ளவர;கள் மழையின்றி விளைவு குன்றி துன்பப்படுவார்கள் என்பதனை,

“உண்டெனுஞ் சுக்கி ரன்றா னுச்சத்துள் ளத்த மிக்கிற்
பண்டெனுஞ் கடலின் முத்தும் பவளமுஞ் சங்கு முண்டாம்
மண்டலம் விளங்க வேதான் மாரியுங் குளிரப் பெய்யுங்
கோண்டநீ சத்தி லத்தங் குணமிலை மழைமட்டென்னே”

என்றும் குறிப்பிடுகின்றது. (மே, செ.எ.153, ப.53.)

சுக்கிரன் மீனத்தில் அஸ்தமனமாகில் உலகத்தில் சிறப்பான மழை, அனைத்து வித தானியங்கள் செழிப்பு, பழமையாகிய கடல் விளைபொருட்கள்; முத்துஞ், சங்கும், பவளங்களும் விளைந்து சிறப்பாக ஒளிரும்.

இராட்சத கடல் அலைகள். கடல் உள்வாங்கல். வற்றல். கடல் நிலை. மெய்ப்பித்தல்

சித்திரை 7 - 9, ஆம் தேதி பஞ்சம், சஷ்டி, சப்தமி, அட்டமி ஆகிய திதிகள், வௌ்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள், 20, 21, 22.04.2018. இராட்சத கடல் அலைகள். கடல் உள்வாங்கல். வற்றல். இரு கிரகம் வக்ர நிலை. சூரி - அசு, செவ் - பூராடம், புத - உதி, குரு - விசாகம் வக்ரம், சுக் - கிரு, சனி - பூராடம், வக்ரம், ராகு - புனர், கேது - திருஓணம்.

சந்திரன் ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் பயணித்தல்.





மெய்ப்பித்தல்

1. விளம்பி வருடப்பிறப்பானது சித்திரை ஒன்று சனி அன்று பிறந்தது. பொதுவாக மாதம் இக்கிழமைகளில் பிறக்கக் கூடாது.

2. நெருப்பு இராசிகள் வலிமை பெற்றுள்ளன.

3. இரு கிரகம் வக்ர நிலை. குரு சுபர். நெருப்பு இராசியில் குரு வீடு. சனி அசுபர் ஆயினும் கால்நடை, விவசாயம் இவற்றிற்கு மிகவும் முக்கியமானவர். சனி சுக்கிரனின் காலில் வக்கரித்து நிற்றல்.

4. இராகு, கேது ஆகியோர் சலராசியில் நிற்றல். அதிக அலை சீற்றத்திற்கு ஒரு காரணம்.

5. நிலராசியில் சந்திரனின் காலில் கேது பயணித்தல். இதன் மீது ராகு, சந்திரன் பார்வை.

6. கேதுவின் பார்வையும் ராகு, சந்திரன் மீது ஏற்படல்.

7. இராகு, கேது ஆகிய அரவுகளுடன் சந்திரன் இணைவு அவ்வாறு ஏற்பட்டது. சந்திரன் இராகுவின் காலில் நிற்றல். ராகு குரு காலில் நிற்றல். அந்த குரு வக்ர நிலை எய்தி காற்று இராசியில் உள்ளதே இதற்குக் காரணம்.

8. மேட சூரியன் அதிக வெப்பம், உச்சநிலை ஒரு காரணம்.

9. இதனுடன் மழைக்கோள் சுக்கிரன் சூரியன் நட்சத்திரப்பாதத்தில் இணைவு. எனவே அதிக வெப்பச்சலனம், அதிக காற்று இதன் காரணமாக இவ்வாறு கடல்நிலை மாறுபாடு ஏற்பட்டது.

10. செவ்வாய், சுக்கிரனின் காலில், வக்ர சனியும் சுக்கிரனின் காலில் நெருப்பு இராசியில் இணைவு, மேலும் அதன் வீட்டில் கதிரவனுக்கு நெருப்பு இராசியில் சுக்கிரனுக்கும் சேர்த்து இடம் தரல்.

எழிலி மழை நீர் அறிவியல் செய்தி

நற்றிணை பாலை நிலம் தனிமகனார் பாடலில், கீழ்கடலிலே சென்றிறங்கி நீரை முகந்து எழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளை அடையும் படி இருண்டு அணுத்திணிந்த இவ்வுலகம் அவ்விருளினின்று புலப்படுமாறு கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற் போல மின்னி எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம் அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி ஒழிதல் இயல்பு என்பதனைப் பதிவு செய்துள்ளது.

“குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புலம் மருங்கிற் சென்றாங்கு” (14)

எனும் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

கடல் அலையை நிறுத்தும் அகத்திய நட்சத்திரம்

அகத்தியன் குறித்த அகத்திய நட்சத்திரம். அகத்திய முனிவர் பெயரால் வழங்கும் இந்நட்சத்திரம் தோன்றும் போது கடல் அலைகள் ஒடுங்கும். இது கடல் அலையை நிறுத்துவதாம். இது அவர் கடல் குடித்த பெருமாட்சிமைக்கு ஓர் அறிகுறியாகும். இந்த நட்சத்திரம் பற்றிய குறிப்பு பரிபாடல் 11 ல் சான்றாக அக்கால நிகழ்வினைத் தெரிவிக்கின்றது. (15)

திரிசங்கு சொர்க்கம், திரிசங்கு உதயம், அத்தமனம், திரிசக்கரம், மகிஷாசுர மண்டலம் (Centaurs)> கப்பல் மண்டலம் அல்லது மலைய மண்டலம் அல்லது பொதிகை மண்டலம், அகத்திய நட்சத்திரம் (Canopus)

சூரியன் நுால் பகல் நட்சத்திரம் பாடம் 9.பகல் நட்சத்திரம் எனும் தலைப்பில் தெற்கு மண்டலங்கள் எனும் உட்தலைப்பில் வட துருவத்தை விட்டுத் தென்துருவத்தை நோக்குவோமாயின், அங்கு நீண்ட வலம்புரிச்சங்கு போல திரிசங்கு (Southern Cross) தோன்றுகிறான். இவன் அரிச்சந்திரன் தந்தை என்றும், தேகத்துடன் சுவர்க்கம் செல்ல முயன்ற போது இவன் குரு வசிஷ்டர் இவனை நீசனாகச் சபித்து விட்டார். சம தரிசன பண்டிதராகிய விசுவாமித்திரருடைய தவ மகிமையால் இந்திரலோகம் சென்றான். அங்கே தேவர்கள் இவனைச் சண்டாளன் எனக் கீழேத் தள்ளவே இவன் உருண்டு விழுந்து ஓலமிட்டு வந்தான். விசுவாமித்திரர் இவனை கீழே விழாத படி தடுத்து இவன் இருந்த இடத்திலேயே ஒரு சுவர்க்கத்தைப் படைத்து அதிலே அவனை நிலை நிறுத்தினாராம். இதுவே திரிசங்கு சொர்க்கம் எனப் புராணம் குறிப்பிடுகின்றது.

திரிசக்கரம், மகிஷாசுர மண்டலம் (Centaurs)> கப்பல் மண்டலம் அல்லது மலைய மண்டலம் அல்லது பொதிகை மண்டலம், அகத்திய நட்சத்திரம் (Canopus)

மேலும் இந்நுால் திரிசங்கு தென்கிழக்கில் உதயமாகித் தென்மேற்கில் அத்தமிக்கும். இது நான்கு நட்சத்திரங்களால் அமைந்து உள்ளது. இம்மண்டலம் தலை கீழாகச் சுற்றித் திரிதலின் இதனைத் திரிசங்கு என்று கூறல் பொருந்தும். இதற்குக் கிழக்கே இரண்டு நட்சத்திரங்கள் இவ்வாறே திரிதலின் அவற்றைத் திரிசக்கரம் என்பர். திரிசக்கரத்தை முதன் முதலாகக் கொண்டு மகிஷாசுர மண்டலம் (Centaurs) உள்ளது. இவற்றிற்கு மேலே பல நட்சத்திரங்களோடும் சேர்ந்து ஒன்றாய் விளங்கி அனுடம், கேட்டை, மூலம் என்றிவை சேர்ந்து விளங்கும். தேள் மண்டலத்திற்கு அடுத்தாற் போலத் தெற்கில் தோன்றுகிறது. திரிசங்குவின் மேற்கில் அதனைப் போன்ற பெரிய நான்கு நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. இவற்றினின்றும் திரிசங்குவைப் பிரித்தறியலாம். இவற்றோடு அருகில் உள்ள நட்சத்திரமும் சேர்ந்து கப்பல் மண்டலமாகின்றது. இதற்குத் தென்மேற்காக ஒரு ஒளியுள்ள நட்சத்திரம் தோன்றுகின்றது. அதனையே அகத்திய நட்சத்திரம் (Canopus) என்று வழங்குவர். இதனை பரிபாடல் குறிப்பிடுகின்றது. அங்கே அகத்தியர் இருத்தலின் மேனாட்டார் குறிப்பிடும் கப்பல் மண்டலத்தை மலைய மண்டலம் அல்லது பொதிகை மண்டலம் என்றும் வழங்கலாம். இது கொறுகலப்பை என்று உலகினர் வழங்கும் கால புருட மண்டலத்திற்குச் (Orion) சற்றுத் தெற்கே இருக்கின்றது. பார்வதி தேவியாருக்குத் திருமணம் நடந்த போது இமயமலையில் எல்லோரும் வந்திருந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து உலகம் தலை கவிழ்ந்தது போலத் தத்தளிக்க, அதனைச் சமநிலைப் படுத்துவதற்குத் தக்க எடையுடையவர் அகத்தியரே என்று கருதிச் சிவபெருமான் அவரைப் பொதிய மலைக்கு அனுப்பினாராதலின் அந்தத் தெற்கெல்லையில் இவர் விளங்குகின்றார் என்பது புராணக்கருத்து என விரிவான விளக்கம் தெரிவிக்கின்றது. (16)

கடல் என்பதன் விளக்கம், எழுவகைப் பிரிவுகள், ஆறாமீனறவோட்டு என்பது புயல் அறிகுறி, கடல் அளவு, மகா சமுத்திரங்களின் பகுதிகள், நிற பேதம் உள்ள கடல்கள், திசையறிகருவி, நிலையான நட்சத்திரங்கள் - துருவ நட்சத்திரம் (pole star) இதன் சிறப்பு, சமுத்திர நீர் பல்வேறு நோய்களைத் தீர்க்கும். வருஷகர்ப்பம் சமுத்திரத்தில் மழை பிரளயம் ஏற்படும். கடல் வற்றல் மாதங்கள் ஆடி - ஆதி, ஆவணி - சனி, புரட்டாசி - செவ்வாய் மாதம் கிழமை பிறந்தால் கடல் வற்றும். இராட்சத கடல் அலைகள். கடல் உள்வாங்கல். வற்றல். கடல் நிலையை மெய்ப்பிக்கும். எழிலி மழை நீர் அறிவியல் செய்தியினைப் பகர்கின்றது. மேலும் கடல் நிலைகளை ஆராய்கின்ற போது இதன் உண்மை புலப்படுகின்றது. இவ்விதம் கடல் பற்றியனவும் பதிவாகி உள்ளன.

சான்றெண்கள்

1. தமிழ் தமிழ் அகராதி ப.576.

2. ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, ப.709.

3. தமிழ் தமிழ் அகராதி ப.198.

4. ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, பக்.385 - 386.

5. அபிதான சிந்தாமணி, ப.1492.

6. அபிதான சிந்தாமணி, ப. 1198 - 1199.

7. அபிதான சிந்தாமணி, ப. 1199.

8. அபிதான சிந்தாமணி, ப.990.

9. ஈ.த.இராஜேசுவரி, சூரியன் சூரியகுடும்பம், பக். 159 - 160.

10. ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, ப.1058.

11. இராதா கிருஷ்ணன், சித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி, ப.173.

12. ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, ப.1691.

13. கடுவன் நாராயணசுவாமிகள், விதான மாலை மூலமும் உரையும், செய்யுள் எண். 25 - 26, 18, பக்.171 - 172.

14. நற்றினை, பாடல் எண்.153:3.

15. ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, ப.6.

16. ஈ.த.இராஜேசுவரி, சூரியன் சூரிய குடும்பம், பக். 163 - 165.

(குறிப்பு: சான்றெண்களில் நூல்களைக் குறிப்பிடும் நிலையில், நூலின் பெயர், நூலாசிரியர், வெளியிட்ட பதிப்பகம், ஊர், பதிப்பு மற்றும் ஆண்டு போன்றவைகளைச் சேர்த்துக் குறிப்பிடுவது கட்டுரைக்கான தரத்தை அதிகரிப்பதுடன், படிப்பவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் - ஆசிரியர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.