யாழில் சுகாதார பிரிவினரின் கவனயீனமான செயல்!!
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கொரோனா தொற்று இல்லாத ஒருவரை சுகாதார பிரிவினர் கொரோனா நோயாளிகளுடன் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையம் வரை அழைத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன்பின்னர் குறித்த நபரை தொற்று இல்லை. என மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மருதனார்மடம் சந்தையில் வெற்றிலைக் கடை நடாத்தும் குறித்த நபர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அவரிடமும் மாதிரி பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இருப்பினும் அதன் பெறுபேறு நேற்றுவரை அவருக்கு தெரியப்படுத்தாத நிலையில் நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற சுகாதார அதிகாரிகள்அவருக்கு கொரோனா தொற்று உள்ளதென கூறி வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
குறித்த நபர் வாகனத்தில் ஏற்றிய சுகாதார அதிகாரிகள், சுன்னாகம் கண்ணகி முகாமில் வசிக்கும் ஒரு கொரோனா நோயாளியினையும் ஏற்றிக்கொண்டு வேறு ஒருவரது முகவரி தேடித் திரிந்து அதன் பின்பு வைத்தியசாலையினை வாகனம் அடைந்துள்ளது.
இதன்போது கோப்பாய் கல்வியல் கல்லூரி வாசலில் பதிவேட்டினை பரிசீலித்தவர் கொரோனா நோயாளர் பெயர் பட்டியலில் குறித்த நபரின் பெயர் இல்லை எனக்கூறி இரண்டாவது நோயாளியை மட்டும் வைத்தியசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து அவரை மீண்டும் அதிகாரிகள் வீட்டில் கொண்டு சென்றுவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனக்கு தொற்று இல்லையெனினும் கொரோனா நோயாளியுடன் வைத்தியசாலைக்கு பயணித்தமையினால் தனக்கும் தொற்று ஏற்படுமோ என குறித்த நபரும் அவரது குடும்பத்தினரும் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை