வவுனியாவில் அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம்!


வவுனியா கண்டி வீதியில் தபால் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் வீதியின் குறுக்காக சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இந்நிலையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையை அவதானிக்காது வந்த பார ஊர்தியொன்று குறித்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சாரதி படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் கடும் காற்று காரமாக வீதியோரத்தில் நின்ற வாகை மரமொன்று வீதியின் குறுக்காக வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நகரசபை ஊழியர்கள் குறித்த மரம் வீழ்ந்துள்ள இடத்தினை பார்வையிட்டு அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கண்டிவீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியொன்று வேகமாக வருவதை கண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கூக்குரல் இட்டும் மரத்தினை காட்டியும் சாரதிக்கு சைகை காட்டியுள்ளனர்.

எனினும் அதனை அவதானிக்காத பார ஊர்தியின் சாரதி மரத்தில் மோதியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது வாகனத்தில் காயமடைந்த சாரதியை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

மேலும் இதன் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மரத்தினை அகற்றும் பணியினை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகரசபை ஊழியர்கள் மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.