ஒரு பிரதேச மாணவர்களை வகுப்பறையில் பூட்டிய பாடசாலை!


 வேலணை மத்திய கல்லூரியில் சில பிரேதேச மாணவர்கள் ஒரே வகுப்பறைக்குள் பூட்டி வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா அபாய நிலையை கருத்திற் கொண்டு மேற்கொண்டதாக பாடசாலை நிர்வாகத்தினால் கூறப்படும் இந்த நடவடிக்கை, சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பாடசாலை அதிபரே தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த விவகாரம் வடக்கு நிர்வாக உயர்மட்டத்தில் முறையிடப்பட்டு, தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றாளர்கள் சிலர் அண்மைக்காலத்தில் தீவகப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டனர். எனினும் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் குணமடைந்து, பிரதேசங்கள் இயல்புக்கு திரும்பி விட்டன. தற்போது காரைநகர் மற்றும் வேலணை பகுதிகளில் சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வேலணை மத்திய கல்லூரிக்கு ஊர்காவற்றுறை பகுதியிலிருந்து சென்ற மாணவர்கள் அனைவரும் ஒரே வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்டதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரியின் கடிதமும் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சுகாதார பிரிவினர், கல்வியமைச்சின் உயரதிகாரிகளின் தலையீட்டையடுத்து மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.