யாழ் பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு!


 யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் , எங்ளுடைய மொழி புறக்கணிக்கப்படும் இடத்தில் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழின் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஆனல்ட் காலத்தில் அடிக்கல் நாட்டபட்டிருந்த நிலையில் தற்போது இதன் வேலைகள் நிறைவடைந்து, 27 ஆம் திகதி காலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நேரத்தில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு பெயர் பலகையில் இரண்டாவது இடத்தில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு, இங்கு இருக்கும் வர்த்தக நிலையங்கள் சகல நிறுவனங்களிலும் எங்களுடைய மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம்.

அவ்வாறான இடங்களை நாங்கள் திருத்தி அமைத்துக்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது மன வருத்தத்திற்குரியது.

அந்த வகையில் இதன் பெயர் மாற்றத்தை செய்யாத பட்சத்தில் யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் என்ற அடிப்படையில் நான் கலந்துகொள்ள போவதில்லை. என்றும் அவர் கூறினார்.

மேலும், இதற்கு மேலதிகமாக சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து இந்த பெயரை மாற்ற நடவடிக்கை எடுப்பேன் எனவும் யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.