தமிழீழத்தை நேசித்த ஒரு மகத்தான ஆளுமையின் நினைவு நாள்!

 


தமிழீழத்தை நேசித்த ஒரு மகத்தான ஆளுமை ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமாகிவிட்டார்.



தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு  ஆரம்பித்த நாளிலிருந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்டத்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர்.


இந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடாத்திய படுகொலைகளை முதன் முதல் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தவர் அவர்தான்.


பின்னாளில் புலிகளுக்கு இந்திய அளவில் தடை இருந்த போதும் உலகளவில் ஈழ ஆதரவு சக்திகளை ஒன்றிணைத்து டெல்லியில் மாநாடு நடத்தி ஆதரவு கோரியவர்.


இப்படியான ஒரு சூழலில்தான் ஜெயலலிதா வாஜ்பாய் அரசு ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்துவிட்டு வெறும் 13 நாட்களில் ஆதரவை மீளப் பெற்று அரசைக் கவிழ்க்கிறார்.


பின்னர் பெரும்பான்மையை நிரூபித்து வாஜ்பாய் பிரதமர் ஆகிறார். அதில் கூட்டணி வைத்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு எடுக்கிறார்.


வழமை போல் டெல்லி கொள்கை வகுப்பாளர்கள் ஈழ விடயத்தில் மூக்கை நுழைப்பதற்கு இது தடையாகிறது. அதனால் அமத்தியே வாசிக்கிறார்கள்.


ஜோர்ஜ் பெர்னாண்டசின் அன்றைய  இந்த வகிபாகத்தையே இன்று வாஜ்பாய் அரசின் ஈழ ஆதரவாக சிலர் தவறாக முன் வைக்கிறார்கள்.


ஜோர்ஜ் பெர்னாண்டசால் கூட அவர் அந்த பதவிக்கு வந்த பின்பு பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை... தன்னளவில்  

டெல்லிக்கு ஒரு நெருக்கடியைத்தான் கொடுக்க முடிந்தது. ஏனெனில் அவர் இந்திய கொள்கை வகுப்பாக்கத்தை தீர்மானிக்கும்  தனிச் சக்தி அல்ல.. அது ஒரு கூட்டு சக்தி. அதில் அப்போது சில சலனத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறு வகிபாகத்தை கொண்டிருந்தார்.


அது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொருத்தவரை பெரும் ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் புலிகளும் அதன் வரையறையைத் தெரிந்தே வைத்திருந்தார்கள்.


அவர் ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழக்கும் வரை அந்த ஆதரவு   தொடர்ந்தது..


அதன் பின் டெல்லி வழமைபோல் ஈழப் போராட்டத்தில் தங்கு தடையின்றி மூக்கை நுழைத்தது.


துரதிர்ஷ்டவசமாக இன்று மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் தமிழக அரசியல்வாதிகளை - குறிப்பாக கருணாநிதியின் துரோகத்தை நினைவூட்டுகிறது.


கருணாநிதியின் வரையறையையும் நாம் தெரிந்தே வைத்திருந்தோம். இறுதி இன அழிப்பு நேரத்தில் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் போன்று உள்ளக அழுத்தங்களை கொடுத்தாவது தமிழின அழிப்பை தற்காலிகமாகவேனும் நிறுத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நடந்ததோ வேறு.


ஜோர்ஜ் பெர்ணாண்டசின் தமிழீழ ஆதரவு காரணமாகவே இந்திய உள்ளக புலனாய்வுத்துறை அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சோடித்து பதவியிழக்கச் செய்ததாக அப்போது பேசப்பட்டது.


தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் 

"ஈழத் தமிழர்களுக்காக பதவியிழந்தோம்" என்று புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் இருக்கும் வரை தன்னால் முடிந்ததை செய்துவிட்டு ஓய்ந்து போனார் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்.


அன்னார் தனது பணிக்காக தமிழீழ வரலாற்றில் என்றும் நன்றியுடன் நினைவு கொள்ளப்படுவார் அன்னாருக்கு அஞ்சலிகள்.


Parani Krishnarajani 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.