கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்!


கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு கிழக்கு முனையத்தை கொடுக்க அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக தற்போது சர்ச்சை நிலவிவரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுக் கோரிக்கையாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திக் கோரிக்கை அமைந்தது.

ஆனால், கிழக்கு முனையத்தை விடவும் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, இவ்விரு நாடுகளிடமும் பணம் இருக்கின்ற காரணத்தினால் புதிதாக நிர்மாணிக்கும் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதில் இந்த நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவித்திருந்தேன்.

அத்துடன், கிழக்கு முனையத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்க முடியாது எனவும் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்களுக்கு நான் அறிவித்திருந்ததுடன் கிழக்கு முனையத்தை ஒருபோதும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க மாட்டேன் என துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் நான் வாக்குறுதி கொடுத்திருந்தேன்.

எனவே, என்னுடையதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் உறுதியான நிலைப்பாடு இதுவேயாகும். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு வெளிநாட்டிற்கும் கொடுக்க நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.

எனது ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்ட சூழலில் சில தரப்பினர் இந்த முனையத்தைக் கொடுக்க முயற்சிகளை எடுத்த போதும் அதனைத் தடுத்திருந்தேன்” என அவர் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.