தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்டு பயப்படாதீர்கள்!


 கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிட, யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, தற்போதைய நிலையில் டெங்கு நோய் தொற்று யாழ். மாவட்டத்தில் கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலே காணப்படுவதாக குறிப்பிட்டார்.

எனினும், தற்போது மழை பெய்ததன் காரணமாக நீர் தேங்கியிருக்கும் இடங்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமிடத்து டெங்கு நோய்த் தாக்கத்தில் இருந்து யாழ். மாவட்டத்தினைப் பாதுகாக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 284 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.மதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் தொற்றா நோய்கள் கொண்டவர்கள் பிரத்தியேகமாக கவனிக்கப்படுவதாக சிகிச்சை நிலைய மருத்துவர் எஸ்.ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.