புதிய சாதனையைப் படைக்கவிருக்கும் அஷ்வின்!


 இந்தியா – இங்கிலாந்து இடையே நாளை (பிப்ரவரி 24) நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஷ்வின் இன்னும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய வீரர்களில் புதிய சாதனையைப் படைப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 34 வயதான இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஷ்வின், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட்களிலும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளும், இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அத்துடன் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.

அஷ்வின் 76 டெஸ்டில் இதுவரை 394 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 400 விக்கெட்டை நெருங்க இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை. இங்கிலாந்துக்கு எதிராக நாளை (பிப்ரவரி 24) அகமதாபாத்தில் பகல்-இரவாக நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இதை சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 400 விக்கெட்டைக் கைப்பற்றும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார். உலக அளவில் 16ஆவது வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் கும்ப்ளே (619 விக்கெட்), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417) ஆகியோருக்கு அடுத்தபடியாக அஷ்வின் உள்ளார். கும்ப்ளே 85 டெஸ்டிலும், ஹர்பஜன்சிங் 96 டெஸ்டிலும், கபில்தேவ் 111 டெஸ்டிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

ஆனால், அஷ்வின் 77ஆவது டெஸ்டில் 400 விக்கெட்டை எடுக்க அதிகமான வாய்ப்புள்ளது. இதன்மூலம் அவர் இந்திய வீரர்களில் புதிய சாதனை படைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-ராஜ்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.