போராட்டத்தைத் தடுக்க முடியாது; சாணக்கியன் அதிரடி!


நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகி எதிர்வரும் ஆறாம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்தத் தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தேசியக் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.

சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மீண்டும் மக்கள், இளைஞர்களுக்கு விடுத்துள்ள அழைப்பிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டில் எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் அரச நிகழ்வுகள் கூட கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பான விடயங்களுக்காகப் போராட்டம் நடத்தும் போது மாத்திரம் கொரோனாவும், நீதிமன்ற உத்தரவுகளும் வருகின்றன. இதுதான் இந்த நாட்டின் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டம்.

அரசாங்கத்தின் இவ்வாறான பாரபட்சம் காட்டும் அடக்குமுறைக்கு எதிராகவுமே இன்று இந்தப் போராட்டம் பொத்துவிலில் ஆரம்பிக்கப்படுகின்றது. நாங்கள் அதற்குத் தயாராகியுள்ளோம். எமது மக்களுக்காக எந்தத் தடையையும் உடைக்கத் தயாராகவுள்ளோம்.

எனவே, இதற்கு எமது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும். இது எமது உரிமைக்கான போராட்டம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.