இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!


இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண்ணொருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தமது வீட்டில் வைத்து கடந்த 4 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நிமோனியா மற்றும் மோசமடைந்த மூச்சிழுப்பு நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வக்வெல்ல பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்று உறுதியான நிலையில் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 5 ஆம் திகதி மரணித்தார் .

குருதி நஞ்சாதலால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கொவிட் நிமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிமடை பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் பொரலந்த வைத்தியசாலையில் இருந்து தியதலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 4 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நிமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பமுனுகம பகுதியை சேர்ந்த 75 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்று உறுதியான நிலையில் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் மரணித்தார்.

கொவிட் நிமோனியா மற்றும் உடலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்தமை காரணமாகவே அவர் மரணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தும்மலசூரிய பகுதியை சேர்ந்த 84 வயதான பெண்ணொருவர் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்று உறுதியான நிலையில் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் மரணித்தார்.

கொவிட் நிமோனியா, குருதி நஞ்சாதல் மற்றும் மோசமடைந்த சிறுநீரக நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அவர்களில் 63 ஆயிரத்து 401 பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 591 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.