நான்கு தசாப்தங்களின் பின்னர் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள்!


நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, பிரதமர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில், மூவாயிரத்து 330 ஊழியர்கள் பயன் பெறுகின்றனர்.

1980 மற்றும் 1982 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களில் 10 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலத்தையுடைய ஊழியர்களுக்கு, அவர்களது வாழ்நாள் முழுவதும் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு பெற உரிமையுண்டு.

இந்த மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைக்கு அமைய குறியீட்டு ரீதியாக, சில ஊழியர்களுக்கு பிரதமரினால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

2020 ஜுலை 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுக்கமைய, இந்த மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்குப் பொதுத் திறைசேரியிலிருந்து புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு 95 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் ஓய்வூதிய இழப்பாளர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜே.எம்.பிசோமெனிகே, அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்த விரிவான அறிக்கையை பிரதமரிடம் வழங்கிவைத்தார்.

இதன்போது, கருத்து தெரிவித்த பிரதமர், தான் தொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலிருந்து அவதானம் செலுத்திவந்த ஒரு பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வு பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திமுது குலதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.