தமிழர்கள் 24 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு!


திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட் தமிழ் உறவுகளின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

1996 பெப்ரவரி 11ஆம் திகதி, ஒன்பது பெண்கள், 12 வயதிற்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் உட்பட 24பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை நினைவுகூரும் வகையில், அப்பகுதி மக்கள் அங்குள்ள கோயிலொன்றில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூசை வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் ஒன்றுகூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, கோயில் பூசை வழிபாட்டின்போது செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் மாத்திரம் செய்தி சேகரிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.