இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்!


உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என பிரதி பொது மக்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) இணையவழியூடாக நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்ட தடுப்பூசிகள் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில்கிடைக்கப் பெறும்.

அடுத்த கட்டம் எதிர்வரும் காலங்களில் கிடைக்கும். அத்தோடு அரசாங்கத்தினால் 18 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்படும்.

நாட்டில் தகுதியான 4000 தடுப்பூசி நிலையங்கள் இனங்காணப்பட்டுள்ளன. ஒரே சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளை வழங்குவதற்காக 2000 நிலையங்களை தயார்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கமைய ஒரு நிலையத்தில் 300 என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 60 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்கக்கூடியதாகவிருக்கும்.

இந்தியாவிலிருந்து கிடைத்துள்ள தடுப்பூசிகள் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவு குறைவடைந்துள்ளது.

இதற்கான காரணம் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்த கட்டத்தினருக்கு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.