இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ்!

 


ஜனவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற மாதிரிகளிலிருந்தே புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பேசிய அவர்,

இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னரே கொவிட் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டது. அதன் ஊடாக கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டில் சில பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை வைரஸ் கட்டுப்பாடுகளுக்குமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

தற்போது மிகக் குறைந்தளவானோருக்கே புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற மாதிரிகளிலிருந்தே புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு முன்னரும் உருமாறியதும் தன்மைகளில் வேறுபட்டதுமான 26 வகை வைரஸ் நாட்டுக்குள் கண்டறியப்பட்டுள்ளது. இவை வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தவையாகும். அவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் என்பது விஷேட அம்சமாகும்.

பொம்பைமடு , முழங்காவில் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு , குறித்த நபர்களும் 21 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.