ஆளுந்தரப்பு கூட்டணி முரண்பாடுகள் தொடர்பில் அவதானம்!


 பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் காணப்படும் கருத்து முரண்பாட்டை கொண்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்விடயம் குறித்து அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கட்சி  தலைவர் கூட்டத்தில்  கவனம் செலுத்தவுள்ளோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுன அனைத்து பங்காளி கட்சிகளை ஒன்றினைத்து  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியை உருவாக்கியது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக ஒன்றினைந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களாணையை பெற்றுக்கொண்டோம். பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமாயின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். பல்வேறு கொள்கையினை கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியமைத்துள்ள போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானதொரு விடயமாகும். முரண்பாடுகளுக்கு உள்ளக மட்ட பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வை காண முடியும்.

கூட்டணியின் உள்ளக பிரச்சினைகளை பொது இடங்களில் பகிரங்கப்படுத்துவதால் முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம்பெறும். அமைச்சர் விமல் வீரவன்சவின் செயற்பாடுகளை கடந்த காலங்களில் சுட்டிக்காட்டினோம். இவருக்கும் எமக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் கிடையாது. கூட்டணியில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்விடயம் குறித்து எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படும். கூட்டணி பலமாக இருந்தால் மாத்திரமே அரசாங்கத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும். கூட்டணியையும், அரசாங்கத்தையும் ஒருபோதும் பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.