அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் இருந்து நீக்கம்!


மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மலையக மக்கள் முன்னணியினதும், அதன் அணி அமைப்புகளினதும் அனைத்து அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கும் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹற்றனில் உள்ள கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்தார்.

இந்த கூட்டமானது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழுவில் மொத்தமாக 82 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், 64 உறுப்பினர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, கட்சியின் கொள்கையை மீறி 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தீர்மானங்கள்

01. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கட்சியின் கொள்கையை மீறி 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை கட்சியின் கொள்கையை மீறும் செயலாக கருதப்பட்டது.

02. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவ்விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்ற சபையின் தீர்மானத்தை மத்தியகுழு ஏற்றுக்கொண்டது.

03. அ.அரவிந்தகுமாரின், மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகள் மற்றும் அங்கத்துவ உறுப்புரிமை என்பன இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் தலைமைக்காரியாலயத்திற்கு அத்துமீறி பிரவேசித்து அலுவலக பணியில்; ஈடுபட்டமை மத்தியகுழு மற்றும் சபையின் தீர்மானத்தை மீறியதாக மத்தியகுழு தீர்மானித்தது.

04. இதன் அடிப்படையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி உறுப்புரிமையிலிருந்தும், மற்றும் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகளில் இருந்தும் உடன் நடைமுறையாகும் வகையில் நீக்கப்பட்டதாக மத்தியகுழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானங்கள மேற்கொள்ளப்பட்டபோது, பதுளையை பிரதிநிதித்துவம் செய்கின்ற 9 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறிய நிலையில், ஏனைய அனைவருடைய ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, மலையக மக்கள் முன்னணியன் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.