மன்னாரில் கொரோனா வைரஸ் தொடர்பாக முழுமையான நிலவரம்!


மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 305 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில் நேற்று, மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தை பகுதியில் மீன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 5 பேர், ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நுண்கடன் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இருவர், மாந்தை மேற்கு பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் முதல் நிலை தொடர்பாளராகவும் ஒருவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் கடமையாற்றியவரோடு நெருங்கி பழகியவராகவும் மேலும் ஒருவர் கர்ப்பிணிப் பெண் ஒருவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முசலி பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 83 பி.சி.ஆர்.பரிசோதனைகளின்போது எவருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 305 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 288பேர், தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் இந்த மாதத்தில் மாத்திரம் 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 11 ஆயிரத்து 230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 683பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் சுமூகமான முறையில் இடம்பெற்றுள்ளது.

முதல் நிலை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த மூன்று மாணவர்கள், சுகாதார பிரிவின் போக்குவரத்து வசதி ஊடாக குறித்த பரீட்சையில் தோற்றி, இன்றைய தினம் பரீட்சையை நிறைவு செய்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.