அஸாத் சாலியின் கருத்துக்கள் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு!


 மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின்  வெறுக்கத்தக்க கருத்துக்கள்  இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொது சட்டத்திற்கு அனைத்து இன மக்களும் கட்டுப்பட  வேண்டும். 

அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கிற்காக இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என  கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி  பொது சட்டத்துக்கு அடிபணிய முடியாது என்று குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும், அடிப்படைவாத செயற்பாடுகளை தூண்டிவிடும் வகையிலும் அமையும்.

அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முரண்பாடான கருத்துக்களை  குறிப்பிட்டு அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

நாட்டின் பொதுச்சட்டத்திற்கு அனைவரும் அடிபணிய வேண்டும். சட்டத்தின் முன்னிலையில் இனம், மத மற்றும் மொழி அடிப்படையிலான காரணிகள் செல்வாக்கு செலுத்தாது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கம் வகையில் குறிப்பிடப்படும் கருத்துக்களை அலட்சியப்படுத்த முடியாது.

கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அரசியல் நோக்கிற்காக பலவீனப்படுத்தியது. இதன் விளைவு ஏப்ரல் 21 குண்டுத்தாக்கமாக உருவெடுத்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கோணத்தில் முன்னெடுத்தமையினால் அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முடியவில்லை.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள்.

குறுகிய காலத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரம் எந்நிலையிலும் முன்னுரிமை வழங்கும் என்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.