வாள்வெட்டு குழு வவுனியாவில் அட்டகாசம்!

 



யாழில் இருந்து வெள்ளை வேனில் வாள்களுடன் வருகை தந்த குழுவொன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி குறித்த பெண்ணை அழைத்து வந்து பதிவு திருமணமும் செய்துள்ளார்.

இந்நிலையில், யாழில் இருந்து வெள்ளை நிற வேன் ஒன்றில் வருகை தந்த குறித்த பெண்ணின் தந்தை, சகோதரி ஆகியோருடன் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து கட்டியபடி வாள்களுடன் வந்த 10 மேற்பட்ட இளைஞர் குழு பெண்ணை அழைத்து வந்த இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து யன்னல் கண்ணாடியை உடைத்து குறித்த பெண்ணும், இளைஞனும் எங்கே எனக் கேட்டு வாள் முனையில் அச்சுறுத்தியதாகவும், இதன்போது வீட்டு உரிமையாளரின் மகள் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணின் கழுத்தில் வாளினை வைத்து அச்சுறுத்தியதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வீட்டு வளாகத்தில் அமைந்துள்ள இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்குள்ளும் வாள்களுடன் புகுந்த குறித்த குழுவினர், இளைஞனும் பெண்ணும் சம்பவ நேரம் அங்கு இல்லாத நிலையில், வீட்டு  அறையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கு இருந்த வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.