சிறைக்கைதிகள் 8,000 ஆயிரம் விடுவிக்கப்பட உள்ளனர்!


"சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை."

இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கோவிட் - 19 நிலைமையை கருத்தில் கொண்டும் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவி வரும் நெருக்கடிகளைக் குறைக்கும் நோக்கிலும் சிறைக் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான வேலைத்திட்டமொன்று விசேட பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்கவை தலைவராகக் கொண்ட குழுவினரால் ஆராயப்பட்டு வகுக்கப்பட்ட கொள்கைத்திட்ட அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது கொள்கைத் திட்டத்தின் ஊடாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பில் ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

இந்தப் பொதுமன்னிப்பு கொள்கைத் செயற்திட்ட அறிக்கையில் அரசியல் கைதிகளுடன், தீவிரவாதம், பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களைப் புரிந்த சிறைக்கைதிகள் உள்வாங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், சிறு சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள், நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் இந்த அறிக்கை செயற்பாட்டுக்கு வரும் என்றும், அதன்படி, தமிழ் – சிங்கள புதுவருடத்துக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 8 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.