மன்னாரில் கேரளா கஞ்சா பொதிகளுடன் மூவர் கைது!


மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள், டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையின் புலனாய்வுத் தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, 89 கிலோ மற்றும் 355 கிராம் நிறையுடைய இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கஞ்சா கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவர் கூமாங்குளம் பகுதியையும் மற்றையவர் தவசிகுளம் பகுதியையும் சேர்ந்த 25, 44 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.