ஐபிஎல் தொடரில் இருந்து சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் விலகல்

 


நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரும் சகலதுறை வீரருமான மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த சீசனில் விளையாடும்போது கணுக்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒன்றிரண்டு போட்டியுடன் தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார். அவர் சிறப்பாக பந்து வீசியதுடன், துடுப்பாட்டமும் செய்தார்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் 9ம் திகதி தொடங்குகிறது. இதற்காக 8 அணி வீரர்களும் தங்களுடைய அணியுடன் இணைந்து வருகிறார்கள். ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்குப் பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பேட்ஸ்மேனை ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.