பொலிஸ் திணைக்களத்திற்கு மேலும் 10,000 பேர்

 


பொலிஸ் திணைக்களத்திற்கு பத்தாயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கும் போதைப்பொருள் நிவாரண தேசிய கொள்கை வழங்கலை வெளியிடவும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான அமைச்சின் ஆலோசனை குழு தீர்மானித்துள்ளது. உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சம்பளத்தை அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கு இறுதி வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான அமைச்சின் ஆலோசனை குழுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

பாராளுமன்ற அமர்வின் பின்னர் குறித்த ஆலோசனைக் குழு முதற்தடவையாக கூடியுள்ளது. துறைசார் அமைச்சர் என்ற வகையில் குறித்த குழுவின் தலைவராக ஜனாதிபதி செயற்படுகின்றார். தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதான மேம்பாடு, இராணுவ வீரர் சம்பளம், போதைப்பொருள் நிவாரணம் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களை வருடாந்த அறிக்கை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சட்டம் மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார். அதற்கமைய 196 புதிய பொலிஸ் நிலையங்களை ஸ்தாபிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.

மனித வளத்தை அதிகரிப்பதற்கென பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக பத்தாயிரம் பேரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயிரழந்த மற்றும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இறுதி வரை வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அவர்கள் இறந்ததன் பின்னர் அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கு இறுதி வரை வழங்குவதற்கென தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.