காத்திருப்பது இனிது - இலக்கிய நயம்!!

 


அன்றைக்குப் பார்த்து என்னவோ முல்லையின் வீட்டில் இரவுச் சாப்பாட்டுக் கடை முடியவே வெகுநேரம் ஆயிற்று. அது ஒருவாறு முடிந்தவுடன் முத்தம்மாள் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்து விட்டாள். அம்மாக்காரியோ வெற்றிலை உரலை எடுத்து வைத்துப் பாக்கைப் போட்டு இடிக்கத் தொடங்கிவிட்டாள். அப்பாவோ மினுக் மினுக் என்று எரிகின்ற விளக்கு வெளிச்சத்தில் ஏதோ ஏட்டுக்கட்டை எடுத்துப் பிரித்துக் கொண்டிருந்தார்.


முல்லைக்கு இருப்புக்கொள்ளவில்லை. அன்றைக்கு இரவு அவளின் ‘அவன்’ வருவதாகத் திட்டம். வீட்டுக் கொல்லைப்புறத்தில் மரத்தடியில் அவர்கள் சந்திப்பது வழக்கம்.


“எனக்குத் தூக்கம் வருது” என்று பொய்யாகக் கொட்டாவிவிட்டு முல்லை படுக்கை அறையில் பாயை விரித்துப் படுத்துவிட்டாள். தூக்கம் வந்தால்தானே! ஒருவழியாக வீட்டில் அங்கங்கே இருந்த விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. மாடக்குழியில் மட்டும் ஒரு சிறிய விளக்கை எரியவிட்டு முத்தம்மாவும் தூங்கப்போய்விட்டாள். முல்லையின் அன்னை சிறிது நேரம் கழித்து, முல்லையின் பக்கத்தில் இன்னொரு பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள்.


நேரம் போய்க்கொண்டே இருந்தது. வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் நன்கு தூங்கிக்கொண்டிருந்தார்கள், முல்லையைத் தவிர. வீட்டிலுள்ளவர்கள் மட்டுமா? ஊரே குளிர்காலத்தில் முடங்கிப் போய்க் கிடந்தது. ஏறக்குறைய நள்ளிரவு நேரம் இருக்கும்... முல்லை மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். ஓசையின்றி எழுந்து வெளியே வந்தாள். பின்னர் மிகவும் மெதுவாக எட்டெடுத்து வைத்துக் கொல்லைக் கதவை மிக மிக மெதுவாகத் திறந்தாள். திரும்பி வீட்டுக்குள் ஒரு பார்வை பார்த்தாள். பின்னர் மெல்ல அடியெடுத்து வைத்து வெளியே வந்து கொல்லைக்கதவை மீண்டும் சாத்தினாள். வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த திறந்தவெளியில் வேலியாக இருந்த நொச்சி மரத்திற்குக் கீழே வந்து நின்றாள்.


கொஞ்சங்கூட இரக்கமில்லாத வாடைக்காற்று ஊளையிட்டுக்கொண்டு பலமாக வீசியது. ஊகூம், அவன் இன்னும் வரவில்லை. நொச்சிமரத்தின் தாழ்ந்த கிளையொன்று அவன் வரும் வழியை மறைத்துக் கொண்டு இருந்தது. அவ்வப்போது அதனை விலக்கிவிட்டு அவன் வருகிறானா என்று ஆவலுடன் வழியை உற்று நோக்கிக் கொண்டு இருந்தாள்.


தொலைவில் ‘சர சர’-வென்று சத்தம் கேட்டது. அவன்தான் வந்துவிட்டானோ என்று ஆசையுடன் தொங்கிக் கொண்டிடுந்த நொச்சிக்கிளையை அவசரம் அவசரமாக விலக்கிவிட்டதில் ’படக்’கென்று அந்த கிளை முறிந்து கையோடு வந்துவிட்டது. காலையில் பார்த்து அது எப்படி முறிந்தது என்று யாராவது தூண்டித்துருவ ஆரம்பித்தால்? யாரும் என்னமும் நினைத்துக் கொள்ளட்டும் - இன்னமும் அவனைக் காணோமே! என்று அவள் கவலைப்படத் தொடங்கிய போது அவன் வந்து நின்றான்.


அந்தக் குளிர்காற்றிலும் வியர்க்க விறுவிறுக்க. அவள் கோபத்துடன் இருப்பாள் என்று எதிர்பார்த்து வந்தவுடன் அவள் கைகள் இரண்டையும் வளையல்களுடன் பற்றிக் கொண்டான். அந்தக் கைகளை ’வெடுக்’ கென்று பிடுங்கிக் கொண்டாள் அவள். “என்ன? கோபமா?” என்றவன் வியப்படைந்துபோகுமாறு, தன் இரு கைகளையும் விரித்து அவன் முதுகுப்பக்கம் கொண்டுசென்று கைகளை வளைத்து அவனை இறுகக் கட்டிக்கொண்டாள் அவள். அவனும் அவளை அணைத்து இருவரின் மார்பும் ஒன்றுடன் ஒன்று நன்கு பதியும்படி இறுக்கிக் கொண்டான்.


“ரொம்ப நேரமாச்சே, காத்துக்கிடந்து உன் காலெல்லாம் வலிக்குமே’ன்னு ஓடோடி வந்தேன் தெரியுமா?” மெல்ல அவன் கிசுகிசுத்தான். என்னதான் ஊர் தூங்கிக்கிடந்தாலும் உரத்துப் பேசமுடியாதல்லவா!


“ஒங்க வேலையிலேயே மும்முரமா இருந்திருப்பீங்க, என்னயப் பத்தி நெனக்க நேரம் இருந்திருக்காது ஐயாவுக்கு” அவள் பொய்க்கோபம் காட்டினாள்.


”எந்த நேரமும் ஒன்னோட நெனப்புத்தான் எனக்கு” அவன் சமாதானப்படுத்தினான்.


“...க்கும், தெரியாதாக்கும் எனக்கு! நீங்க மட்டும்தானா, ஒங்க ஊர் ஆம்பிளய்ங்க எல்லாமே அப்படித்தானே!”


“என்ன தெரியும் ஒனக்கு, எங்க ஊர் ஆம்பிளய்ங்களப் பத்தி?”


“தெரியும், தெரியும்; காட்டுக்குள்ள வேட்டையாடப் போனா விடிய விடிய வீட்டு நெனப்பே இல்லாம காட்டுக்குள்ள திரிவாங்களாம் ஒங்க ஊரு ஆளுக; பேயாத பெருமழை பேஞ்சு ஒதுங்கக் கூட இடமில்லாமப் போகும்போதுதான் வீட்டு நெனப்பு வந்து கூட்டுக்குள்ள வந்து ஒதுங்குற மாதிரி, வீட்டுக்கு வந்து பாய விரிச்சுப் படுத்துக்கிருவாங்களாம், கேள்விப்பட்டிருக்கேன்”


”அந்த மாதிரி நானும் ஒன் நெனப்பெ இல்லாம என் வேலையிலேயே மும்முரமா இருக்கே’ன்னு சொல்றயா?”


“புரிஞ்சாச் சரி”


“காத்துக்கிடப்பாளே ஒருத்தி, காலெல்லாம் ஒளயுமே! மேலெல்லாம் வலிக்குமே’ன்னு ஓட்டமும் நடையுமா ஓடோடி வந்திருக்கேன். அந்த வலியும் வேதனையும் வந்தவுடன் என்னயக் கட்டிக்கிட்டதுல தீந்துபோச்சுல்ல, இப்ப ஒனக்குச் சந்தோசம் தானே!”


“இதக் காட்டிலும் சந்தோசம் இன்னொன்னு இருக்கு தெரியுமா?”


“அப்படியா? அது என்ன?”


“தன்னந்தனியா, நடுராத்திரியில, கூதக்காத்துல ஒடம்பெல்லாம் நடுங்க, நீ எப்ப வருவியோ, எப்படி வருவியோ’ன்னு தவிப்போட, ஊரெல்லாம் தூங்கயில, உள் மனசு ஏங்கயில, நேரம் ஆக ஆக, நெஞ்செல்லாம் படக் படக்னு அடிக்க, ஒன் நெனப்புல ஏங்கிக்கிட்டுக் காத்துக்கெடக்கேன் பாரு, அதுதான் இப்ப இருக்கிறதக் காட்டிலும் இனிப்பா இருக்கு”


இவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது இனிக்குது என்கிறாளே, என்று வியந்தது அவன் நெஞ்சம்.


”அட கேணப்பயலே! ’உன்னயப் பாத்ததும் நான் பட்ட கஷ்டமெல்லாம் பறந்துபோச்சு’ன்னு மட்டும் அவள் சொன்னாள்’னு வச்சுக்க, நீ இப்படியேதான வந்துகிட்டும் போய்க்கிட்டும் இருப்ப! அப்ப என்னக்கி கலியாணம் பண்ணிக்கப் போற? அதான் அவ உன்னப் பாக்குறதக் காட்டிலும் அதுக்குப் படுற கஷ்டம் இனிக்குது’ங்கிறா. அதப் புரிஞ்சுக்க” என்று அவன் மனம் இடித்துரைத்தது.


இவளின் இந்த வேதனையைப் போக்க, சீக்கிரமா இவளக் கல்யாணம் செஞ்சுக்கிற வழியப் பாக்கணும். அவன் தன் மனத்துக்குள் கூறிக்கொண்டான்.


“இன் இசை உருமொடு கனை துளி தலைஇ

மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்

காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது

வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை

தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை 5

கூதிர் இல் செறியும் குன்ற நாட

வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ்

விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற

நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே

நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் 10

தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை

பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி

மனை மரம் ஒசிய ஒற்றி

பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே” (பாடல் - அகநானூறு - 58 ; திணை - குறிஞ்சி. பாடியவர் : மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் )




அருஞ்சொற்பொருள்:


உரும் = இடி; கனை துளி = பெரிய மழை; மடிந்த = உறங்கிக்கிடந்த; பானாள் = நடுராத்திரி; கங்குல் = இருள்; வேட்டம் = வேட்டை; விளிவிடம் = பாதுகாப்பான இடம்; வரி அதள் = புலித்தோல்; சேக்கை = படுக்கை; கொடிச்சியர் = குறப்பெண்கள்; ஞெமுங்க = அமுங்க; பல் ஊழ் = பல முறை; தொடி = வளையல்; நும் இல் புலம்பு = நீ இல்லாத தனிமை; ஒசிய = ஒடிய;


அடிநேர் உரை


“இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,

உலகத்து உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில்,

காட்டில் தேடுகின்ற வேட்டை முடிவடையாமல்

புலித்தோல் விரித்த படுக்கையில், தெரிந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட

தேன் மணக்கும் கூந்தலையுடைய குறப்பெண்களின் தந்தையர்

குளிரில் தம் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குன்றுகளின் தலைவனே!

வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகள் அமுங்க, பலமுறை

மின்னும் வளையணிந்த முன்கை வளைந்து முதுகினைச் சுற்றிக்கொள்ள

உனது மார்பை அணைப்பதிலும் இனியதாயிற்று -

நீவிர் இல்லாத தனிமையில் நும்மை நினக்குந்தோறும் வருந்தி மெலியும்,

குளிருடன் அசைந்து வரும் பண்பு இல்லாத வாடையில்,

நீ வரப்பெறாமல் நும் வருகையைப் பார்த்துப் பதனழிந்து,

வீட்டு மரத்தில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு

பலரும் துயிலும் இரவில் நீண்ட நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கும் என் நிலை”


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.