வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா தொற்று!


வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில், யாழ். மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சாவகச்சேரி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவருக்கும், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிப்பட்டவர்கள் என்பதுடன் மற்றையவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள மானிப்பாய் பகுதியில் நிதி நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், கண்டிக்குச் சென்று திரும்பிய ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.