ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!!


 ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈத் அல்-ஆதா பண்டிகைக்கு முன்னதாக நேற்று (திங்கட்கிழமை) வடக்கு சதர் நகரில் உள்ள வஹைலத் சந்தையில், இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்ததாக ஈராக்கின் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு இதுவாகும்.

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும். வெடிப்பின் விளைவாக சில கடைகள் எரிக்கப்பட்டன.

குண்டுவெடிப்புக்குப் பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சிகளில், பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்கள் சலசலப்பான சந்தையில் சிதறிக்கிடந்தன.

நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த சந்தை பகுதியில், பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள மத்திய பொலிஸ்துறை படைப்பிரிவின் தளபதியைக், கைது செய்யப் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உத்தரவிட்டுள்ளார் எனக்கூறியுள்ள ஈராக் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வெடிகுண்டு இருந்த அங்கியை வெடிக்கச் செய்தார் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

2017ஆம் ஆண்டின் இறுதியில், சுன்னி முஸ்லிம் ஜிகாதி குழுவுக்கு எதிரான சண்டையில், தாங்கள் வெற்றி அடைந்ததாக ஈராக் அறிவித்தது.

ஆனால், அந்த ஜிகாதி குழுவை சேர்ந்த சிலர் இன்னும் நாட்டில் உள்ளனர். பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் வாழும், சத்ர் நகரத்தில் உள்ள ஒரு சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

கடந்த ஜனவரி மாதம் தயரன் சதுக்கத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலையும் தாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ் கூறியது. இந்த குண்டு வெடிப்பில் 32பேர் உயிரிழந்தனர். மூன்று ஆண்டுகளில் தலைநகர் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு இதுதான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.