இரண்டு சிம்மாசனங்கள்!!


 ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.


அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.

“சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...” என்றார்.

“பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...” என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம். அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்துப் பூஜையை முடித்தார்.

தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான்.

எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான்.

சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது.

அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான்.

ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.

எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான்.

“புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்...” என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததைப் பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, “இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்? அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே...” என்று கேட்டான்.

அதற்கு எமதர்மன், “இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்தப் புண்ணியத்தினால், இவரைத் தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்...” என்றான் எமதர்மன்.

தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, “சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக
புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...” என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.