மாறியது மனம் - விஜி ரவி!!

 


ஜன்னல் வழியே வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ஜானகி. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வீதி ஆளரவமற்று வெறுமையாகக் காட்சியளித்தது . “ஒரு நாளைக்கு குறைஞ்சது எழுநூறு வண்டி போயிட்டு வந்துட்டு இருக்கும். இப்ப ஒரு சைக்கிள் கூட போறதக் காணும். ஆள் நடமாட்டம் காலையில அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி பதினோரு மணி வரைக்கும் தொடர்ந்து இருக்கும். ஆனா இப்ப ரோட்டில் போற மனுஷங்கள விரல் விட்டு எண்ணிடலாம். எதுக்கு தான் இந்த வியாதி வந்துச்சோ.?. மனுஷங்களை எல்லாம் இப்படிப் போட்டுப் பாடாப்படுத்துதே... கோவிலுக்குப் போய் சாமி தரிசனம் பண்ண முடியுதா...? ஏன் இந்த அப்பார்ட்மெண்ட்ல மத்த வீட்டுக்காரங்க முகத்தைப் பார்த்தேப் பல நாளாகிடுச்சே...” எனத் தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டார்.


பால்கனியில் வரிசையாக வீற்றிருந்த தொட்டிச் செடிகளின் குளுமையும், பசுமையும் கண்களை நிறைத்தன. வர்ஷாவும் த்ரிஷாவும் போட்டி போட்டுக் கொண்டு அவற்றுக்கு நீர் வார்த்துப் பராமரிப்பார்கள். சின்னதாக ஒரு இலை துளிர்த்தாலும் அவ்வளவு ஆனந்தம் அவர்களுக்கு.

“பாட்டி... வந்து என்னோட மணி ப்ளாண்ட்டப் பாருங்க. எவ்வளவு ஜோரா இருக்குன்னு...” என த்ரிஷா அவரின் வலது கரத்தைப் பிடித்து இழுத்தால், வர்ஷா இடக் கரத்தைப் பற்றியபடி, “பாட்டி... மொதல்ல என்னோட ஸ்நேக் ப்ளாண்ட்டப் பாருங்க” என்பாள். “இருங்க தங்கங்களா.. ரெண்டு செடியையும் பார்க்கிறேன்” எனக் குழந்தைகளின் குதூகலத்திற்குச் சற்றும் குறையாமல் அவரும் ஆவலோடு செடிகளை ரசிப்பார். “இதைப் பாருங்க குட்டீஸ்... இந்தச் செடியோட பேரு திருநீற்றுப் பச்சிலை. இந்த இலையை மோந்து பாருங்க... எவ்வளவு வாசனையா இருக்குனுட்டு...” என்றவுடன் முகர்ந்து பார்த்து விட்டு, “ஆஹா... அருமையான வாசனை...” என மெச்சும் பேத்திகளை நினைத்து இதழ்க் கரையோரம் புன்னகை அரும்பியது ஜானகிக்கு.

“என்னங்கத்தை... தானா சிரிச்சிட்டு இருக்கீங்க...?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். சுமதி நின்றிருந்தாள்.


ஒண்ணும்மில்லமா... சும்மாதான்... அதுசரி... ஏன் அதுக்குள்ள எழுந்திட்ட...? மணி ஆறரைதான ஆகுது...?இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே...? ஆபிஸ் போற நாட்கள்லதான் அஞ்சு மணிக்கே எழுந்து சமையலறையில் வேலை பார்க்கணும். இப்ப என்ன லீவு தானே... நல்லாத் தூங்க வேண்டியதுதானே...” என்றார் மருமகளைப் பார்த்து வாஞ்சையாக. .

“முழிப்பு வந்துருச்சு அத்தை... அவர் கூட எழுந்துட்டாரு. நான் போய் பிரஷ் பண்ணிட்டு மூணு பேருக்கும் காப்பி கலக்கறேன்...” என்றபடி நகர்ந்தாள் சுமதி. .

ஒரு கையில் காபி டம்ளரும் மறு கையில் நாளிதழுமாக சோபாவில் அமர்ந்தான் முரளி..

“நல்லவேளை... லாக்டவுன் காலத்துல நியூஸ் பேப்பராவது வீட்டுக்கு வருதே... அந்த மட்டும் சந்தோஷம். இந்த டிவியில, எப்பப்பாரு இத்தனை பேர் இறந்துட்டாங்க... இத்தனை பேருக்குக் கொரோனான்னு சொல்லிப் பயத்தை அதிகப்படுத்திட்டேப் போறான்...” என்றார் ஜானகி. .

“பேப்பர்லேயும் அதையேத்தாம்மா போட்டிருக்கான். முதல் பக்கத்தில் இருந்து கடைசி வரைக்கும்" என்றான் முரளி காப்பியை உறிஞ்சியவாறு. .

“ஏம்பா முரளி... நாலாவது ப்ளோர் சுந்தரத்துக்குக் கொரோனா குணமாகி நேத்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டி வந்துட்டாங்கன்னு சொன்னியே... இப்ப எப்படி இருக்காரு...? ஏதாவது தகவல் தெரியுமா...?”.

“நார்மலா இருக்காருன்னு அவர் பையன் குமார் மெசேஜ் பண்ணி இருந்தாரும்மா குரூப்ல...”.

“அவருக்கும் வயசு 80 க்கு மேல ஆகுது. நல்லா இருந்தாச் சரிதான்...” என்றபடி எழுந்த ஜானகி குளியலறை நோக்கிச் சென்றார்..

குளித்து, பூஜையறையில் விளக்கேற்றி வைத்து அபிராமி அந்தாதி சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தார். சுமதி கோதுமை மாவு பிசைந்து கொண்டிருந்தாள். .

“இன்னைக்கு என்ன பூரியா...? நேத்து ராத்திரியே வாண்டுகள் ரெண்டும் பூரி வேணும்னு ஆர்டர் போட்டுச்சுகளே... சரி. நான் உருளைக்கிழங்கு வேக வச்சு எடுத்து வைக்கிறேன். நீ போய் குளிச்சிட்டு வா...” என சுமதியை அனுப்பிவிட்டு வேலையில் ஆழ்ந்தார். இடையில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த பேத்திகளுக்கு பால் காய்ச்சிக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்..

குளித்து முடித்து வந்து சுமதி, “அத்தை... குப்பை வண்டி வந்திருக்கு போல.. நான் கீழே போயிட்டு வந்துடறேன்” என்ற போது தலையசைத்தபடி சமையலறை ஜன்னல் வழியாகக் கீழேப் பார்த்தார். காக்கி யூனிபார்மில் இருந்த வரதன் குப்பைகளை வாங்கிக் கொட்டிக் கொண்டிருந்தான் வண்டியில்... “ஒன்பது மணி ஆச்சுண்ணா டாண்ணு வந்தர்றான்... இந்த ஊரடங்குக் காலத்தில் கூட” .

எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த வரதன், இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகத் தெரிந்த ஜானகி அம்மாளின் முகத்தைப் பார்த்ததும் சட்டென தலையைக் கவிழ்த்துக் கொண்டான். ஏனோ அவரைப் பார்த்தாலே அவனுக்கு ஒருவித பயம் வந்துவிடும்.

தினமும் காலையில் ஐந்துக்கு எழுந்து காலை டிபன் மற்றும் மதிய உணவிற்கான ஆயத்தங்களில் இருக்கும் மருமகள் சுமதிக்கு ஒத்தாசை செய்ய அடுக்களையில் புகுந்து விடுவார் ஜானகி. காய்கறிகள், வெங்காயம் வெட்டி த் தருவது, தேங்காய் துருவுவது, இட்லி வெந்து விட்டால் தட்டில் கொட்டி ஹாட் கேஸில் போட்டு வைப்பது, சப்பாத்தி திரட்டி த் தருவது என அவர் கை கொடுப்பதால் சுமதியால் சுலபமாக சமையல் வேலைகளைக் கவனிக்க முடிந்தது. முரளி, சுமதி , த்ரிஷா, வர்ஷா என நால்வருக்கும் பாட்டில்களில் தண்ணீர் பிடித்து, டிபன் டப்பாக்களையும் ஸ்பூன்களையும் மதிய உணவுப் பைகளில் வைத்து விடுவார்.

எட்டரை மணிக்கெல்லாம் நால்வரும் கிளம்பிப் போனதும் குளித்து முடித்து கையில் பூக்கூடையுடன் அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்குக் கிளம்பிவிடுவார். தெருவின் மத்தியிலோ அல்லது தெருக்கொடியிலோ தினமும் வரதனை எதிரேச் சந்தித்து விடுவார். “டங் , டங்” என இரும்புத் துண்டால் குப்பை வண்டியில் தட்டி ஓசை எழுப்பியபடி பரட்டைத் தலையுடன், பீடி நாற்றத்துடன் நிற்கும் அவனைப் பார்த்தாலேப் பற்றிக்கொண்டு வரும். சுத்தமா உடுத்திக்கிட்டு பூ, பழத்தோட கோவிலுக்குப் போற நேரத்துல குப்பைவண்டிய ஓட்டீட்டு வந்து நிற்கிறான். நாத்தம் குடலைப் பிடுங்கிறது...” என்று முந்தானையால் மூக்கைப் பொத்தியவாறு அவனைப் பார்த்து முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்வது அவள் வழக்கம்.

“இந்தப் பெரியம்மாவுக்கு என்னைப் பார்த்தாலே ஆக மாட்டேங்குது... நான் என் கடமையைத்தான செய்யறேன்...” என்று தனக்குள் நினைத்துக் கொள்வான் வரதன். ஆனால், சுமதி அவனிடம் தன்மையாகத்தான் நடந்து கொள்வாள். குப்பை கொட்டக் கீழே வரும்போது இரவில் மீந்துபோன சப்பாத்தியோ, சாதமோ அவனுக்கு அவ்வப்போது தருவாள்.

ஜானகி அம்மாளுக்கு அவன் மேல் அப்படி வெறுப்பும் கோபமும் ஏற்படக் காரணம். ஒரு முறை இரவில் கடைவீதிக்கு சென்று விட்டு ஜானகியும் சுமதியும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது டாஸ்மாக் கடை வாசலில் போதையில் குளறியபடி தள்ளாட்டத்துடன் நின்று கொண்டிருந்தான் வரதன். இடுப்பில் இருக்கும் லுங்கி எந்த நேரத்திலும் அவிழ்ந்துவிடும் நிலையில் இருந்தது. “கர்மம்...கர்மம்... சம்பாதிக்கற காசைக் குடிச்சே அழிப்பான் போல” எனத் தலையில் அடித்துக் கொண்டார் ஜானகி.

“எப்படியோ இருந்துட்டுப் போறான் அத்தை. நமக்கு என்ன வந்தது...?” என்றாள் சுமதி. “எனக்கு என்னமோ அவனைக் கண்டாலே பிடிக்கல்லை... அவனுக்கு மூஞ்சியும், முழியும்...” என்ற ஜானகியின் கோபத்திற்கு தூபம் போடுவது போல் வீட்டு வேலைக்கு வரும் அஞ்சலை வேறு அவனைப் பற்றிக் கதைகதையாகச் சொல்லுவாள்.

“எங்கத் தெருவுலதாம்மா அவன் வீடு. நிதம் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டியப் போட்டு அடிப்பான். பாவம் அது வாயில்லாப் பூச்சி... அடி தாங்காம அழும் போது பாவமா இருக்கும். கண்ணாலம் கட்டி நாலு மாசம்தான் ஆகுது” என்று அவள் சொல்லும் போது, “இவனுக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடா...?” என்பார்.

“இப்போ மதுக்கடைகள் மூடி இருக்கிற இந்த நேரத்தில என்ன செய்வானாம் குடிக்கிறதுக்கு...?” என்று நினைப்பு ஓட, “சரி... என்னமோப் பண்ணித் தொலையட்டும். இவனைப் போய்... காலங்காத்தால நினைச்சிக்கிட்டு இருக்கேனே...” எனத் தலையை உலுக்கிச் சிந்தனையைக் கலைத்து விட்டுப் பூரி தயார் செய்வதில் முனைந்தார்.

ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த மறுநாளே சுந்தரத்துக்கு மாரடைப்பு வந்து இறந்து போனார். கொரோனாவால் இறந்ததினால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் அவர்களுக்குச் சென்று உதவ முடியவில்லை. பக்கத்து ஊர்களில் இருக்கும் உறவினர்களாலும் வரமுடியவில்லை. பாவம்... குமாரின் குடும்பம் திகைத்துதான் போயிற்று. “இப்படி ஒரு நிலைமை வரவேண்டாம் யாருக்கும்...” என நினைத்து நினைத்து மாய்ந்து போனார் ஜானகியம்மாள். “இவங்களுக்கு எப்படியாவது உதவ முடியுமான்னு பாரப்பா...” என்றார் மகனிடம்..

“அதத்தாம்மா யோசிச்சிட்டு இருக்கேன்...” என்ற முரளி சொன்ன போது, கீழ்த்தளத்தில் கசகசவென பேச்சுச் சத்தம் கேட்டது.

“நான் என்னன்னு போய் பார்த்துட்டு வரேன்...” என்றபடி கீழே இறங்கிப் போனான் முரளி.

அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த முரளி, “ஒரு வழியாப் பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சு. நம்ம தெருவுக்குக் குப்பை வாங்க வர்ற வரதன் தன் சகாக்கள் சிலரைக் கூட்டிகிட்டு வரேன்னு சொன்னான். ஆம்புலன்சுல பாடிய எடுத்துக்கிட்டு மின்மயானம் கொண்டு போறேன்னு சொல்லிட்டுப் போய் இருக்கான்... இந்தக் கஷ்டமான காலத்தில் கை கொடுத்த அவனைத் தெய்வமாக பார்க்கிறாரு குமார்”

“உண்மைதான். இந்த ஊரடங்கு நேரத்துல்ல எல்லாரும் வீடடஞ்சு கிடக்கிறப்போ டாக்டர்கள், நர்சுகள், போலீஸ்காரங்க சமுதாயத்துக்கு சேவை செய்றாங்க... அதே மாதிரி இந்தத் துப்புரவுப் பணியாளர்களும் நாள் தவறாமல் வந்து குப்பை வாங்கிட்டு போறாங்க. அவங்க தான் ஜி.ஹெச்சுல கொரோனாவால இறந்து போற ஆட்களோட பிரேதங்களை மின் மயானம் கொண்டு போறாங்க...” என்று சுமதி சொன்ன போது ஜானகியின் மனம் கரைந்தது.

மறுநாள் காலை குப்பை வண்டியுடன் வந்த வரதனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

வழக்கமாக வரும் சுமதிக்குப் பதில் வந்த ஜானகி அம்மாள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கையும் மீறி அவர் கண்கள் சிரிப்பது தெரிந்தது.

“என்னப்பா வரதா... நல்ல காரியம் பண்ணின உனக்கு கோடிப் புண்ணியம் உண்டு...”

“என்னங்கம்மா... அப்படி எல்லாம் இல்லைங்க... ஏதோ மனுஷனுக்கு மனுஷன் செய்கிற உதவிதானுங்க...”

“ரொம்ப நல்ல மனசு தான் உனக்கு... அப்புறம் ஒரு விஷயம்... இந்தக் குடிப்பழக்கத்தை சித்த நிறுத்திடேன். உன் சம்சாரம் பாவமில்லையா...?”

அம்மா.. நான் இப்பல்லாம் குடிக்கிறதில்லைங்க.... அத நிறுத்தி ஒரு மாசமாச்சுங்களே... என் பொண்டாட்டி முழுகாம இருக்கா... என் கொழந்த நல்லபடியா பொறக்கணும். நல்லவனா வாழணும். இப்பத்தான் எனக்குப் புத்தி வந்திருக்கு...” என்றான் வெள்ளையாக சிரித்தபடி.

“சபாஷ்! கருவில இருக்கிறப்போவே அப்பனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத் ஜானகியம்மாளுக்கு திருச்சா உன் குழந்தை...” என அவன் சிரிப்பில் கலந்து கொண்டார்.

ஜானகியம்மாளுக்கு ஏனோ மனம் லேசான உணர்வு தோன்றியது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.