இலங்கை அணிக்கு கிடைத்தது ஆறுதல் வெற்றி!

 


இந்திய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்து தொடரை இழந்திருந்தாலும் இந்த இறுதிப் போட்டியின் வெற்றி இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்துள்ளது.

கொழும்பு- ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி இந்தியக் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது போட்டியின் இடைநடுவே மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதன்போது இந்தியக் கிரிக்கெட் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரித்வீ ஷோ 49 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அகில தனஞ்சய மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் சமிக்க கருணாரத்ன மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 226 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அவிஷ்க பெனார்டோ 76 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளையும் சேட்டன் சக்கரியா 2 விக்கெட்டுகளையும் கிருஸ்னப்பா கௌதம் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க பெனார்டோ தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக சூர்ய குமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colomb

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.