கருட பஞ்சமி: எண்ணினாலும் துதித்தாலும் நல்லனவையே அருளும் திருநாள்... விரதம் இருக்கும் வழிமுறைகள்!


இந்த நாளில் கருடனைக் கண்டால் மோட்சப் பேறு கிடைக்கும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். செவ்வாய் பலம் கூடும்; எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஆன்றோர் வாக்கு.


'விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி, தெய்வப்புள், கொற்றப் புள், கருடாழ்வார், மங்களாலயன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன்'... கருட பகவானுக்குத்தான் எத்தனை எத்தனை திருநாமங்கள். திருமாலை விட்டு நீங்காத திருவடியாம் கருடாழ்வானின் பெருமை கூறும் கருட பஞ்சமி தினம் நாளை (13-8-21) கொண்டாடப்பட இருக்கிறது.

திருமாலின் மகிமை மிக்க வைர முடியை விரோசனன் என்ற அசுரன் திருடிக் கொண்டான். அதை ஒரு தீவில் ஒளித்து வைத்து யாரும் அணுக முடியாமல் காத்தும் வந்தான். திருமாலின் ஆணைப்படி பெரிய திருவடியாம் கருடனே, அசுரனை வீழ்த்தி அந்த வைர முடியை மீட்டு வந்தார். வரும் வழியில் தன் மீது ஒட்டி இருந்த மண்ணைத் திருநாராயணபுரத்தில் உதிர்த்தார். அந்த மண்ணே 'திருமண்' என்று வைணவ சம்பிரதாயத் திருக்கதை கூறுகின்றது.


கருடனை வானில் தரிசிப்பதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும் பிறவிப் பயனைத் தரும் என்பார்கள். காக்கும் கடவுளான திருமாலுக்கு அவர் மனவேகத்துக்கு தகுந்த விரைவான ஆற்றல் கொண்டவர் கருடாழ்வார். காரணம் திருமாலின் வாகனம் கருடன் என்றால் கருடரின் வாகனம் வாயு! திருமாலின் கொடியாக, வாகனமாக, காவலனாக, சாமர சேவை செய்யும் தொண்டனாக விளங்குபவர் கருடன். ஆடி மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் பஞ்சமி திதி நாள் கருட பஞ்சமி என்று போற்றப்படுகின்றது. இது கருடாழ்வாரின் பிறவித் திருநாள் என்றும், கருடனின் தாயான விநதையைக் காக்க இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை கருடன் கொண்டு வந்த நாளே கருட பஞ்சமி என்றும் கூறப்படுகிறது.


கருட பஞ்சமி விரதத்தை எப்படி அனுஷ்டிக்கலாம் என்று காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாச்சாரியாரிடம் கேட்டோம்.

"கருடனின் திருவருளைப் பெற்றுத் தரும் இந்த கருட பஞ்சமி நாளில் கருட பகவானை வழிபாடு செய்து வணங்குவதால், பகைமை உணர்வு நீங்கும். கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும்; வாழ்க்கைச் செழிக்கும். மேலும் பக்தி, நினைவாற்றல், வேதாந்த அறிவு, வாக்கு சாதுர்யம் போன்றவையம் கிட்டும் என்கிறது ஈஸ்வர சம்ஹிதை. மனவியாதி, வாய்வு, இதய நோய், விஷ நோய்கள் தீரும்.


இந்த நாளில் கருடனைக் கண்டால் மோட்சப் பேறு கிடைக்கும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். செவ்வாய் பலம் கூடும்; எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஆன்றோர் வாக்கு.

உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காகவும், பலமும் அதிர்ஷ்டமும் கொண்ட பிள்ளைகளைப் பெறவும் பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து கருடனைப் போற்றுவார்கள். வழக்கமாக இந்நாள் அதிகாலை பூஜை கருட ஹோமத்துடன் திருமஞ்சனமும், இரவில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். அப்போது பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது வைகுந்த பதவியை அளிக்கும் என்பார்கள். இந்நாளில் கருட மந்திரம் மற்றும் கருட பகவான் துதிப்பாடல்களைப் படிக்கும் அன்பர்களுக்கு மறுமையில், கருடாழ்வார் தான் தாங்கியிருக்கும் அமிர்தத்தில் இருந்து சிறிது வழங்குவார் என்பது பெரியோர்கள் நம்பிக்கை.


ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள்தான் அந்த வீட்டின் சக்தி. வீட்டு வழிபாடுகள் தொடங்கி சகல வேலைகளும் இல்லாள் இல்லாமல் முடிவடையாது. அப்படிப்பட்ட சக்திகளுக்குச் சகல சக்திகளையும் கொடுக்கக்கூடிய நாள் கருட பஞ்சமி. இந்தத் திருநாளை `நாக பஞ்சமி’ என்றும் சிலர் அழைப்பார்கள். எனவே இந்த நாளில் கருடனை வழிபடுவதுடன், நாக வழிபாடும் செய்து வணங்குவதால் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம். ஆனால் தமிழ் நாட்டில் பெரும்பாலும் கருட பஞ்சமிக்கு முதல் நாளே நாக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது.


கருட பஞ்சமி நாளின் அதிகாலை எழுந்து நீராடி வீட்டையும் பூஜையறையையும் தூய்மைப்படுத்தி அலங்கரிக்க வேண்டும். வீட்டின் நுழை வாசல் கதவின் அருகே உள்ள சுவரில் மஞ்சள், குங்குமம் தடவி வைக்க வேண்டும். இது மங்கல வரவேற்பு என்பதால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிறையும். முடிந்தவர்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடரை வழிபடலாம். அதேபோல் வீட்டுக்கு அருகே உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் ஊற்றி வணங்கி, புற்று மண்ணை பிரசாதமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். கருட பஞ்சமி நாளில் சிலர் மஞ்சள் சரடில் மலர் ஒன்றை வைத்து அதை கையில் கட்டிக்கொள்வார்கள். வீட்டின் பூஜை அறையில் அம்பிகைக்கு முன்பு கருடரையும் நாகராஜரையும் எண்ணி வழிபடலாம். அப்போது 'ஓம் கருடாய நம: ஓம் நாகராஜாய நம:’ என்று சொல்லி வழிபடலாம்.


இதனால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் வருத்தப்படுவோர் உடனே பலன் பெறுவர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வீடு சுபிட்சமாக இருக்கும்; சகல பாக்கியங்களும் இந்நாளில் கருடரை வழிபட இல்லங்களுக்கு வந்து சேரும்!’’ என்றார்.


கருட பகவானின் திருவுருவமும் வழிபாடும் உள்ள இடத்தில் வெற்றியே உண்டாகும் என்பது ஸ்ரீமன் நாராயணின் திருவாக்கு. இவரின் நிழலே இளைய பெருமாளான லட்சுமணனின் மயக்கத்தைப் போக்கியது. அதனால் எண்ணினாலும் துதித்தாலும் நல்லனவையே அருளும் பெரிய திருவடியை கருட பஞ்சமி நாளில் துதித்து நலம் பெறுவோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.