விடுதலைப் புலிகள் மீது எனது மனதில் உள்ள ஆழமான வடு

 


எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களை விடுதலைப் புலிகளே கொன்றார்கள். வடுக்கள் மனதில் இருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் ஒருவர், ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிபடுத்த முடியுமா என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களை கொலை செய்தார்கள்.

இது உலகறிந்த உண்மை. இதில் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருக்கின்றோம். விடுதலைப் புலிகள் இருக்கின்ற போது கூட நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம். உண்மையை நாம் மறக்க முடியாது.

இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம். அப்படி இருந்தும், வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் கூட இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றியும் இருந்தோம் எனத் தெரிவித்தார்.

-வவுனியா தீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.