சுமங்கலி வடு - சிறுகதை!!

 


இதமான காலை வேளை. தூக்கம் உதற அடம்பிடிக்கும் வயது தனத்திற்கு. பத்தாம்வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருக்கிறாள். கூரைகள் வேயக் கிடுகு பின்னுவது குடும்பத் தொழில். சொந்த வீடு இல்லை. உறவுக்காரரின் தோட்டத்தில் அடிமை வேலை. ஊறலில் கிடக்கும் மட்டைகளை எடுத்துவிட்டார் அப்பா. சமையல் வேலைகளைச் செய்கிறாள் அம்மா. “பொம்பளப்புள்ள இன்னவரைக்குமா தூங்குவ எந்திரிடி” அம்மா லட்சுமியின் குரல்.


அப்பொழுதுதான் கண்ணன் வந்தார். என்னப்பா குபேரா? எப்படியிருக்க? பொம்பளப்புள்ள பத்தாவது எழுதியிருக்கு போல. பையனப் படிக்க வைக்க முடியாமத்தான் வண்டி பழுது பார்க்கிற கடைக்கு அனுப்பியிருக்க. பொம்பளப்புள்ளக சீக்கிரம் வளந்திரும். ஒரு நகநட்டப் போட்டுக் கல்யாணத்தப் பண்ணணும். நம்மகிட்ட அதுக்கு எங்க சக்தியிருக்கு? அதான் எம்புள்ளய நான் கோயம்புத்தூர் மில்லுல விட்டுருக்கேன். மாச மாசம் சம்பளம் அனுப்புறா. மூணு வருசம் கழிச்சு நமக்கு அம்பதாயிரம் குடுப்பாங்க. அதவச்சு அவ கல்யாணத்தப் பண்ண வேண்டியதுதான என்ன சொல்ற?

கல்யாணம் என்றதும் நெஞ்சில் பரவிய நெருப்பு முகத்தில் பரவியது குபேரனுக்கு. வார்த்தைகளைக் கோர்த்துப் பேசச் சிரமப்பட்டார்.

“ஒம்புள்ளயக்கூட அனுப்புப்பா. ஒனக்கும் ஒதவியா இருக்கும்ல. என்னப்பா யோசிக்கிற நாலு பேரப்போல நாமும் வாழணும்ல? என்று கண்ணன் சொன்னதும் குபேரன் யோசித்து, “ம் ம்” கொட்டிக் கொண்டிருந்தார்.

“அப்ப ஒம்மகள அனுப்பி வையி. போக்குவரத்துச் செலவக்கூட அவுகளே பாத்துக்குவாக. மாசத்துக்கு ஒரு தடவ நாம போன்ல பேசலாம். தோணுனாப் போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்று கண்ணன் சொல்லி முடிக்க பெருமூச்செறிந்தார் குபேரன்.

அரைகுறையாய்க் குபேரனிடம் சம்மதம் வாங்கி, தனத்தை விசைத்தறி மில்லுக்கு அனுப்ப உத்தேசமானது. திடீரென்று படிப்பில்லை, ஊரில்லை, உறவில்லை என்றானதோடு வேலை அதுவும் தெரியாத கோயம்புத்தூர்ல என்றதும் மனக்கலக்கம் அதிகமானது தனத்திற்கு.

கோயம்புத்தூர்க்கு ரயிலுவண்டில கூட்டிப் போறாங்க. முதமுதலா ரயிலுவண்டி பாக்குறா தனம் வாயப் பொளந்து. கழிவறை அருகேதான் பயணம். இறங்கி ஏதேதோ பேருந்தில் ஏறி மாறி மாறிப் பயணம். என்னென்னவோ புத்திமதிகள் சொல்லி விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

அறிந்தவர்கள் யாருமில்லாக் காடு அப்படித்தான் தோன்றியது தனத்திற்கு. ஒரு பெரிய விசாலமான அறை. ஆங்காங்கே பைகள், கண்ணாடிகள். சிலர் தூங்குகிறார்கள். சிலர் வேலைக்குக் கிளம்புகிறார்கள். பெண்களின் கூட்டம். 250 பேர் இருப்பார்கள். கழிப்பிடம் மூன்று தான். தனமும் குளித்துத் தயாரானாள்.

முதல்நாள் மணிமேகலை வந்து அழைத்துப் போனாள். அவள் தனத்தின் ஊர்தான். கண்ணனின் மகள். தொழிற்சாலைக்குள் முதன்முதலாய் நுழையத் தயக்கம் பின்னிழுத்தது. உள்ளே சென்றதும் ஒரே இரைச்சல் யாரோ தலையில் ஓங்கி அடிக்க எங்கெங்கும் இரைச்சலே வியாபிப்பதுபோல். தனத்திற்குத் தலைவலி தாங்கவில்லை.

மணிமேகலை தனத்தைத் தொட்டு உலுக்கினாள். “என்னாச்சு தல வலிக்குதா?” ஒன்றும் புரியாமல் குத்துமதிப்பாக ஆமாம் என்று தலையசைத்தாள். “அப்படித்தான் முதல்ல இருக்கும் அப்பறம் சரியாயிரும்” என்றாள் மேகலை.

கண்காணிப்பாளர் வந்து தனத்திடம், “என்னம்மா புதுசா?” என்றார். அவளுக்கு இரைச்சலில் காதில் எதுவும் விழவில்லை. மேகலை வந்து “ஆமாம் சார், இன்னக்கித்தான் வந்திருக்கா...” என்றாள்.

“சரி சரி வந்து துடப்பத்த எடுத்துச் சுத்தம் பண்ணு” என்றதும், கைகாட்டிய இடத்தில் இருந்த பெருக்குமாறால் பஞ்சினைக் கூட்டித் தள்ளினாள்.

“ தண்ணி எடுத்து வந்து இந்த மிஷினக் கிளீன் பண்ணு”என்று அடுத்து அடுத்து தூள் பறத்த வேலைகளில் மூழ்கிப்போனாள் தனம். இரைச்சலில்லா தன் கிராமத்து வாழ்வு அடிக்கடி நினைவில் வந்து கண்ணில் ஈரத்தைப் பரப்பியது.

இரவு 7 மணிக்கு வேலை முடிந்தது. எல்லோரும் வெளியேற தனத்தைத் தேடி வந்தாள் மேகலை. “ வாடி ரூம் போகலாம்” என்று அழைத்துச் சென்றாள். திடீரென்று நிகழ்ந்துவிட்ட தனிமையில் இரவு முழுவதும் தூங்காமல் அழுதழுது முகம் வீங்கிப் போனது. அடுத்த நாள் ஒரு வழியாகத் தேற்றி வேலைக்கு அழைத்துச் சென்றாள் மேகலை. இப்படியாக ஒரு வாரம் உருள, அந்தவாரம் மேகலைக்குப் பாதி இரவு வேலை. தனம் தனித்து விடப்பட்டாள்.

இப்பொழுது புதுப்பயம் தொற்றிக் கொண்டது. தெரிந்த ஒருத்தியும் அருகில் இல்லை. என்ன செய்ய வேலைக்குப் போக வேண்டுமே? ஒரு வழியாகத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். பாதிக்கும் மேலாக உள்ளே ஆண்களாக இருந்தார்கள்.

அய்யோ என்று உதறல் எடுக்க, ஆண்கள் “புதுசா?” என்று கேட்டவாறு அந்த வேலையைச் செய், இந்த வேலையைச் செய் என்று ஏவிக் கொண்டிருந்தார்கள்.

“டீ எடுத்துட்டு வா” ஒரு பெரிசு கத்தியது. “இந்தாங்கண்ணே” என்று கொடுத்ததும் கையைத் தொட்டு வாங்கியது பெரிசு. “சூப்பர்வைசர்கிட்ட ஸ்குரூ டிரைவர் வாங்கிட்டு வா” இயந்திரத்தின் கீழே இன்னொரு ஆள். கேட்டு வாங்கி வந்து குனிந்து கொடுத்தாள். அவளின் மார்புப் பகுதியைத் தொட்டான் அந்த மெக்கானிக். இவள் சரட்டென்று விலகி நிற்க, திருப்பக் கேட்கவும் கொடுத்தாள். ஒன்றும் தெரியாதவனைப் போல் வாங்கிக் கொண்டான்.

என்னென்னவோ ஆளுக்கொரு வேலை தந்தார்கள். அவள் அங்குமிங்கும் ஓடி வேலை செய்தாளே தவிர மனது ஓரிடத்திலேயே நின்றது. வேலயும் முடிந்தது. அவள் வெளியேற, அவளைப்பார்த்துக் கையசைத்தாள் மேகலை. “நீ ரூம்க்கு போ. நான் உன்ன காலைல வந்து பாக்குறேன்டி”என்றாள். ஆனால், இவள் முகம் ஏதோ போன்று இருப்பதைப் பார்த்து,“என்னடி என்ன ஆச்சு? முகமே ஒரு மாதிரி இருக்கு?” என்றாள் மேகலை.

“ஒன்னுமில்லடி” என்று சுரத்தில்லாமல் கூறினாள் தனம். “சரிடி காலைல பார்ப்போம்” என்று இருவரும் பிரிய, அறைக்குச் சென்றவள் முந்தின நாட்களை விடத் தாங்க முடியா துயரக் கடலில் வீழ எப்பொழுது தூங்கினாள் என்றே தெரியவில்லை. இரவு உணவும் சாப்பிடவில்லை. காலையில் எழுந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. பல் தேய்த்து, ஒரு குவளை தேநீர் குடித்ததும் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள். சாப்பிட்டு வேலைக்குத் தயாரானாள். ஆலைச்சங்கு ஒலித்தது. இன்று தவறாக ஏதேனும் நடந்தால், உடனே கண்காணிப்பாளரிடம் சொல்லியாக வேண்டும் என்று உறுதியோடு நடந்தாள்.

ஒவ்வொருவரும் அழைத்து ஆளுக்கொரு வேலையைக் கொடுத்தார்கள். யாரும் இன்று தவறாக நடந்து கொள்ளவில்லை. தனத்திற்குச் சந்தேகம் உண்டானது. ஒரு வேளை தெரியாமல் நடந்திருக்குமோ? நான்தான் தவறாக நினைத்துக் கொண்டேனா? என்று உள்ளுள் ஓர் ஐயம். ஒரு வாரம் நன்றாகத்தான் போனது. மனது தெளிவாகி, நாம்தான் தவறாக நினைத்துவிட்டோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

இந்தவாரம் தனத்திற்கு சுழற்சி பாதி இரவு வேலை. அவளோடு வேலை செய்த ஆண்கள் சிலரும் வந்திருந்தனர். அடிக்கடி வேலை வாங்கும் பெரியவர் அருகில் அழைத்து,“கண்ணு நீ எந்த ஊரு?” என்று வினவ,“நான் மதுர” என்றாள். உங்க அம்மா, அப்பா என்ன பண்றாங்க கண்ணு” இப்படியாக நீண்டு இயல்பாக வீட்டுச் சூழழை அறிந்து கொண்ட பெரியவர், “நாளை வா. உனக்குத் தறிய எப்படி ஓட்டறதுன்னு சொல்லித் தறேன். எதுவும் தேவன்னாலும் கேளு” என்றார். தனமும் “சரிங்கப்பா” என்றாள்.

அன்று அவளுக்கு நிம்மதியான உறக்கம். நாமும் வேலை கற்றுக் கொள்ளப் போகிறோம், எடுபிடி வேலை செய்யத் தேவையில்லை என்ற மகிழ்ச்சியில் உறங்கிப் போனாள். வேலைக்கு அதே உற்சாகத்துடன் கிளம்பினாள். பெரியவர் பக்கத்திலிருக்கும் ஏதோ ஊரிலிருந்து வேலைக்கு வருகிறார். அவரைத் தனது அப்பாவைப் போன்றேக் கருதினாள். சில வேலைகளை அவரிடமிருந்து கற்றும் கொண்டாள்.

பெரியவரைப் பார்க்கவும், அவருக்கு உதவவும், வேலைகளைக் கற்கவும் என்று ஒரு மாதம் மிக வேகமாக ஓடியது. இப்பொழுது பெண்களோடு இயல்பாகப் பேசவும் செய்தாள். இவள் குடும்பத்தைப் போலவே பல்வேறு காரணங்களுக்காக இவள் போன்றும், இவளை விடவும் வயதில் குறைந்த சிறுமிகளும் வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

நாட்கள் ஓடின. பெரியவர் தனத்தை அழைத்து இனிப்புக் கொடுத்தார். “என்னப்பா விஷேசமா?”என்றவளிடம், “சும்மாதான்ம்மா பாக்கெட்டுல கெடந்திச்சு அதான் கொடுத்தேன்” என்றார். “பைவ்ஸ்டார் சாக்லேட்டா? வேணாம்ப்பா” என்று மறுத்துப் பார்த்தாள். பாசமாய் கொடுக்கவும் வாங்கிக் கொண்டாள்.

அடுத்தநாள் பாத்திரத்தில் பிரியாணியுடன் வந்தார். “எஞ் சம்சாரம் பண்ண பிரியாணி உனக்குக் கொஞ்சம் கொண்டு வந்தேன் ரூம் போகும்போது எடுத்துட்டுப் போ”என்றார். “வேணாம்ப்பா ரூம்ல எனக்கு சாப்பாடு இருக்கும்” தனம் கூற பெரியவரின் முகம் மாறியது.

“என்ன ஒனக்குப் பிடிக்காதா? இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாத...?” என்றதும் “சரிப்பா நான் போகும்போது எடுத்துட்டுப் போறேன்” என்றாள்.

மதியத்தில் தோழிகளோடு சாப்பிட்டாள். தோழிகள் ரசித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.“இங்க சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு” என்றாள் பிரியா. “ஆமாடி புளிச்சமாவு, தண்ணி சட்னி. ஒரு வட சாப்பிட்டா அதுக்கு தனி காசு. நம்ப சம்பளப் பணத்துல வேற கழிச்சிருவாங்க” இது நாகுவின் வருத்தம்.“என்ன பண்றது சாப்பிட ஆசயாத்தான் இருக்கு. வெளிலயும் விடமாட்டாங்க. வீட்டுக்கு காசும் அனுப்பனுமே? அத வச்சுத்தான் தம்பிக்கு வைத்தியம் பாக்க முடியும்” இது நிவேதாவின் கவலை.

“சரிங்கடி இன்னொரு தடவ கெடச்சா கொண்டு வர்றேன்.” என்றாள் தனம். பாத்திரத்தை கழுவிக் கொண்டு சென்று “ அப்பா பிரியாணி நல்லா இருந்துச்சுப்பா அம்மாகிட்ட சொல்லுங்க” என்றாள் புன்சிரிப்புடன் தனம்.

“ஒனக்கு வேற எதுவும் வேணும்னாலும் கேளு கண்ணு. காசு மெதுவா குடு. வெளில இருந்து எதுவும் தேவப்பட்டாலும் வாங்கித் தர்றேன்” என்று தனத்தை பார்த்தவாறே பெரியவர் கூறிக்கொண்டிருக்க, தனத்தை வேறு வேலைக்கு அழைக்கவும் வேலைக்கு ஓடினாள்.

அடுத்தநாள் சிறு பையுடன் பெரியவர் வந்து, அதைத் தனத்திடம் கொடுத்தார். “என்னாப்பா இது” என்று தனம் கை நீட்ட, அவளது கையைத்தடவி “ஒனக்குத்தான் இது” என்று கூறிச் சென்றவர், அவள் திறக்கப் போவதைக் கண்டு “அதைக் கொடு வேலை முடிந்ததும் தருகிறேன்” என்று படக்கென்று பையோடு சேர்த்து அவளது மார்புப் பகுதியையும் தொட்டுவிட்டார். சுருக்கென்றது தனத்திற்கு, அப்பாதானே தெரியாமல் கைபட்டிருக்கும் எனத் தேற்றிக் கொண்டாள்.

“ஒண்ணுமில்ல பிள்ளகளுக்கு தேவப்படறதுதான். வேணாண்னு சொல்லாத கண்ணு” என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டுஅகன்றார்.“சரிங்கப்பா” என்றாள் தட்டுத்தடுமாறி, அறைக்குச் சென்று திறக்க. நகப்பூச்சு, உதட்டு மை, தலைக்கு அணிபவை, வளையல்கள், பொட்டு, பவுடர் இத்யாதிகள்.

ஏன்? ஏதற்காக இவையென்று விடை தெரியாமல் விழித்தாள் தனம். அவரிடமே கொடுத்து உறவை முறித்துக் கொள்ள வேண்டும். இது சரியில்லை என்று நினைத்தாள். அன்று ஞாயிறு விடுமுறை நாள். இன்று வேலை செய்தாள் 150 ரூபாய் அதிகமாகக் கிடைக்கும். இல்லையென்றாலும், சென்றுதான் ஆக வேண்டும். பையுடன் சென்றாள். பெரியவர் வரவில்லை. குழப்பத்தோடு பையை அறைக்கு எடுத்துச் சென்றாள்.

மறுநாள் பெரியவர், “என்னா கண்ணு எல்லாப் பொருளும் ஒனக்குப் புடிச்சதா? ஒனக்கு எது பொருத்தமா இருக்கும்னு தேடிப்பார்த்து வாங்கினது” என்றார் ஒரு மாதிரியான குரூரச் சிரிப்புடன், “இல்லப்பா... இது எனக்கு வேணாம்” தனம் கூறியதும், “அப்பான்னு கூப்பிடாத” என்றார் கோபமாக.

“ஏன்ப்பா? என்னாச்சு??” என்றதும் கோபம் மாறாமல் “ஒனக்கு என்ன சொன்னாலும் புரியாதா? ஒனக்கு என்ன வேணும்னாலும் கேளுங்கிறேன். புரியமாட்டுதே?” என்று நிறுத்தி, “உள்ளாடை வேண்டுமென்றாலும் கேள்” என்றதும்,

தனத்திற்கு என்ன செய்ய ஏது செய்ய ஒன்றும் விளங்கவில்லை. திடீரென பூமியிலிருந்து அதள பாதாளத்தில் விழுந்தது போல, சிறிதாய் ஊர்ந்தாள். உடலெல்லாம் கூசி அருவருக்கத் தக்கதாய் அவள் உடலே தகித்துப் போனது.

கண்காணிப்பாளரிடம் அனுமதி வாங்கி அறைக்குச் அழுது கொண்டே சென்றாள். அன்று வீட்டிற்குத் தொலைபேசியில் பேசும் நாள். 25-வது ஆளாக இவளை அழைத்தார்கள். எதிர் முனையில் அம்மா பேசி அழவும், இவள் சொல்ல நினைத்த வார்த்தைகள் வற்றி வறுமை நினைவில் ஊமையானாள்.

மீண்டும் இயந்திரவேலை. இப்பொழுதெல்லாம் பெரியவரின் இரட்டை அர்த்தப் பேச்சுகள் அதிகமாகி, அன்று உச்சத்தைத் தொட்டது. “இங்கபாரு தனங்கண்ணு உன்ன நான் முழுங்கவா போறேன். நீ அப்பப்ப என்ன அட்ஜஸ்ட் பண்ணிக்க. உனக்கு என்ன வேணுமோ தர்றேன். காசு வேணும்னாலும் தர்றேன்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தன் தோளில் கைவிழ தடுமாறி கீழே விழப் போனவளை மேகலை பிடித்து விட்டாள். தொட்டது மேகலைதான்.“உங்கம்மா வந்திருக்காங்கடின்னு சொல்ல வந்தா. இப்புடி அரண்டு முழிக்கிற” என்று மேகலை கூறியதும் தனத்திற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அம்மா எனக் கத்திக்கொண்டு கட்டிப் பிடித்துக் கொண்டாள். பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மதிப்பெண் பட்டியல் வாங்க அழைக்க வந்ததாகவும் கூற, அம்மாவுடன் துடுக்குக் தனங்களை உதறிய தனம் அமைதியாக அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

சம்பளம் திரும்ப வரும்போதே கொடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. மதிப்பெண் பட்டியல் வாங்க வந்த இடத்தில், அவளது படிப்புச் செலவை ஆசிரியர்கள் ஏற்க இப்பொழுது பள்ளி செல்கிறாள். ஆனாலும் சுமங்கலித் திட்டத்தின் வடு மாறவில்லை. அதனாலேயேப் பெண்களைத் தொழிற்சாலைக்கு அனுப்ப முனையும் பெற்றோர்களைத் தடுப்பதோடு அப்பெண்கள் தொடர்ந்து பயில ஆசிரியர்களின் உதவியோடு முயன்று வருகிறாள்.

தீயினாற் சுட்டபுண் ஆறும், ஆனால் வடு? ஆண்கள் பெண்களை மதிக்கக் கற்க வேண்டும். வெறும் உடலாகப் பார்க்கக் கூடாது, என்று தனத்தின் மனம் ஏங்குகிறது? நீங்களே அதற்கு நல்ல பதிலைத் தந்திடுங்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.