கைதான ரௌடிகளின் வாக்குமூலம்!!

 


யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாட்டிலிருந்து தப்பித்து இந்தியா சென்றுள்ள தேவா மற்றும் ஜெனி ஆகியோரே தம்மை இயக்குவதாக கைதான  சந்தேக நபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்திவரும் இந்திரன் நிரோஷ்குமார் (27) என்பவர் மீதே கடந்த முதலாம் திகதி இரவு 7 மணியளவில் ஆவா குழு ரௌடிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் கழுத்து, காலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய பழக்கடை உரிமையாளர் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனையடுத்து குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று கைது செய்தனர்.

சுன்னாகம், மல்லாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களைச் சேர்ந்த 25-28 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வாள்களை செய்து கொடுத்த குற்றச்சாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற தேவா மற்றும் ஜெனியும் அச்சுறுத்திக் கூறியதால்தான் இந்த தாக்குதலை தாம் செய்ததாக விசாரணைகளில் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைதான சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கோண்டாவில் காரைக்காலில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.