விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிருஷ்ணா நதிநீர் இணைப்பு கால்வாய்க்கு சென்ற இரண்டு சிறுவர்கள் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மூன்றாவது நாள்தான் விநாயகர் சிலைகளை கரைப்பது வழக்கம். ஆனால், நேற்றே சிலர் விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று கரைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த செவ்வாபேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஷ்யாம் விக்னேஷ்(13) , எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரது மகன் மோனிஷ்(12) 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை இரண்டு சிறுவர்களும் விளையாட்டாய் தாங்கள் செய்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணாநதிநீர் இணைப்பு கால்வாய்க்கு சென்றுள்ளனர்.
விநாயகர் சிலையை தூக்கி கால்வாயில் வீசுவதற்கு பதிலாக கால்வாயில் கரைப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீருக்குள் சிறுவர்களை தேடினர். ஆனால் சிறுவர்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகியும் கிடைக்காததால் பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்ட பின் சிறுகடல் பகுதியில் இன்று காலை சிறுவர்களின் உடல்கள் கிடைத்தன.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுவர்களின் உடல்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-வினிதா
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை