தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சம்பளம்!

 


புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வேலை, படிப்பு, வெளிநாடு செல்ல என அனைத்திற்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதாவது, புதுச்சேரியில் அரசின் சலுகைகளை பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம். அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கும், முதியோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை பெறுவதற்கும், தீபாவளிக்கு சலுகைகள் அறிவித்தால் அதை பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 15 நாட்களுக்குள் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மிக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வரும் காலத்தில் கல்வி, அரசு சலுகை உள்ளிட்டவைகளை பெறுவதற்கு ஆவணமாக கருதப்படலாம் என்று ஆகஸ்ட் மாதமே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.