ஆப்கானில் பெண்களுக்கு தொடரும் தடை


ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனங்களில் கள உதவியாளர்களாக பெண்கள் செயல்படவும், உயிருக்குப் போராடும் மக்களை காக்கும் பணியில் பெண்கள் ஈடுபடவும் தலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.

ஆனால், இந்த மனிதநேய உதவியிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பில் செய்யப்படும் உதவியிலும் பெண்களைப் பயன்படுத்த தலிபான்கள் தடை விதி்த்துள்ளதாக டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

இது குறித்து டோலோ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ மனித உரிமை கண்காணிப்பாளர் ஹீதர் பார் கூறுகையில் “ ஆப்கானிஸ்தானில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெண்களின் உயிர்காக்கும் சேவை, தேவையான அடிப்படை உதவிகளுக்கு கூட பெண்களை களப்பணியாளர்களாக, கள உதவியாளர்களாக பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

மனித நேய உதவிகளைக் கூட பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வழங்க முடியாத நிலையில்தான் இருக்கிறோம். 34 மாகாணங்களில் 3 மாகாணங்களில் மட்டும்தான் பெண்களை களப்பணியாளர்களாக பணியாற்ற தலிபான்கள் அனுமதித்துள்ளனர்.

நாட்டில் பணியாற்றும் பாதிக்கும்மேற்ற பெண் களப்பணியாளர்கள் தலிபான்கள் உத்தரவால் கடும்பின்னடைவைச் சந்தித்துள்ளனர். பெண்கள் பணிக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ஆண்கள் துணைக்குச் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் பெண்கள் தங்கள் பணிகளை சுதந்திரமாகச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தா்” என செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கன் மனித உரிமை ஆர்வலர் சோமன் கூறுகையில் “ ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா சபை, உலக சுகதாார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தலிபான்கள் செயல்பட வேண்டும். அவர்களுக்கு ஒத்துழைத்தால்தான், மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.