தடுப்பூசி அட்டை : விசேட அவதானம்

 


பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (04) இடம்பெற்றது.

கனடாவில் பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும்போது, பூரண தடுப்பூசியேற்றத்திற்கு உள்ளான அட்டையைக் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், தொற்றிலிருந்து தாம் பாதுகாக்கப்படுவதுடன், ஏனையவர்களுக்கும் அது பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி ஏற்றத்தை, இலங்கையர்களுக்கு வழங்க ஆரம்பித்தமை மிக சிறந்த நடவடிக்கையாகும் என்றும், எதிர்காலத்தில் அது ஏனைய தரப்பினருக்கும் வழங்கப்படுமாயின் சிறந்ததாகும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களுக்குத் தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.