ஆபத்தான அழகு-- குட்டி கதை

 


ஒவ்வொரு முறையும் தண்ணீர் குடிக்கும் போது தன்னை தனது பிரதிபலிப்பை பார்த்து, தான் அழகாக இல்லை, கருப்பாகப் பிறந்து விட்டோமே என்ற சோகம். கொக்கின் வெள்ளை நிறத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவாறு அதனிடம சென்று “வெள்ளை வெளேர் என எவ்வளவு அழகாக இருக்கிறாய்!” என்று சொன்னது.


கொக்கு, “நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், பஞ்சவர்ணக் கிளியை பார்த்தாயா? ஐந்து நிறங்களுடன் என்னை விட அழகாக இருக்கிறது” என்று சொன்னது. அப்படியா என்று பஞ்சவர்ணக் கிளியைத் தேடிப் பறந்தது.

காகம் கிளியை பார்த்ததும் எவ்வளவு அழகாக இருக்கிறது என நினைத்து, அதனிடம் “நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ அதிர்ஷ்டசாலி, ஐந்து நிறங்களுடன் இவ்வளவு அழகாக இருக்கிறாய். உன்னைப் போல் நான் பிறக்கவில்லை. நீ மிகவும் அதிர்ஷ்டசாலி” என்றது.

உடனே கிளியும், “ஆம் நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனால் மயிலைப் பார்த்திருக்கிறாயா பன்னிரண்டு நிறங்களுடன் தோகையை விரித்து அழகாக ஆடும். அதுதான் அதிர்ஷ்டசாலி” என்றது.

அப்படியா எனக் காகம் மயிலைத் தேடிப் பறந்தது.

எங்கெங்கோ பறந்தும் ஒரு மயிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் ஒரு மிருகக்காட்சி சாலையில் மயிலைப் பார்த்தது. அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

காகம் அதனிடம் சென்று, “மயிலே நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி. நீ அழகாக இருக்கிறாய் என்பதற்காக மக்கள் உன்னை ஆர்வமாய்ப் பார்த்துச் செல்கிறார்கள். நீ மிகவும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்” என்றது.

ஆனால் மயிலோ, “எனக்கு இந்த அழகுதான் ஆபத்தானதாக முடிந்துவிட்டது. பார்த்தாயா என்னை கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள். எனக்குச் சுதந்திரம் என்பதே கிடையாது. நீதான் அதிர்ஷ்டசாலியான பறவை சுதந்திரமாகப் பறந்து திரிகிறாய். பறவைகளுக்குச் சுதந்திரமாக பறந்து திரிவதுதான் மகிழ்ச்சி. ஆனால், அது எனக்கு எப்பொழுதும் கிடைக்கப் போவது இல்லை” எனக் கூறியது.

காகம் அதைக் கேட்டு மௌனமாகப் பறந்து சென்றது.

அதன் பின்னர், ஒருபோதும் தன்னை வேறு பறவைகளுடன் ஒப்பிட்டு கொள்ளாமல் தனது சுதந்திரத்தை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டது.

நாமும் பலமுறை நம்மை பிறரிடம் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக, முன்னேறிச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டுமேத் தவிர, பிறர் எப்படி வாழ்கிறார்கள் என்பதில் எதையும் தேடி அலையக்கூடாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.