முல்லைத்தீவின் பல இடங்களில் இராணுவ படையினரின் பாதுகாப்பு சோதனை!

 


மாவீரர்நாள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவின் பல இடங்களில் இராணுவ படையினரின் பாதுகாப்பு சோதனை சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அண்மையாகவும் கடற்கரை, நந்திக்கடல் பகுதி, முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையான பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு புதிய சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பான பகுதி ,மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாகவுள்ள வீதி, அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல முன் பகுதி, இரணைப்பாலை துயிலும் இல்ல சந்தி பகுதி உள்ளிட்ட இடங்களில் இராணுவம், பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதோடு, முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு செல்லும் அனைத்து உள் வீதிகளிலும் இராணுவம், பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து 24 மணிநேரமும் பொலிஸ் காவல் அணியொன்று நிறுத்தப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அண்மையாகவுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

நினைவுத்தூபிக்கு அண்மையாகிவுள்ள தேவாலயங்கள் ,பிள்ளையார் ஆலயம், பொது மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு சுற்றியுள்ள மறைவான இடங்களில் இராணுவத்தினர் இரகசிய காவலரண்களை அமைத்து மறைவான முறையில் தூபி பகுதியை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.