பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு தடை உத்தரவு!
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதிய மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மறு அறிவித்தல் வரை - விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால் குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (05-01-2022) அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை